ஏற்காடு மலை அமைந்துள்ள சேர்வராயன் மலைத் தொடரில், கடந்த ஒரு மாத காலமாக, கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், அங்கு பயிரிடப்பட்டுள்ள காபி செடிகளில், காபி பழங்கள் அறுவடை பணி தடைப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
சேலத்தை ஒட்டி, சேர்வராயன் மலைத்தொடர் அமைந்துள்ளது. இங்கு, தமிழகத்தின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக ஏற்காடு உள்ளது.
இம்மலைத்தொடர், கடல் மட்டத்தை விட சுமார் 4,000 முதல் 5,000 அடி உயரம் கொண்டது. இதன் காரணமாக, ஏற்காடு உள்பட சேர்வராயன் மலைத் தொடரில், ஆண்டு முழுவதும் இதமான தட்பவெப்பம் நிலவும்.
எனவே, ஏற்காடு உள்ளிட்ட மலைக்கிராமங்கள் பலவற்றிலும், காபி, மிளகு உள்ளிட்ட பணப்பயிர்களும், ஆரஞ்சு, பலா, பேரிக்காய் உள்ளிட்ட பழ வகைகளும் பயிரிடப்படுகின்றன.
தற்போது, சேர்வராயன் மலைத்தொடரில் நிலவும் கடும் பனிப்பொழிவால், அங்கு பயிரிடப்பட்டுள்ள காபி செடிகளில் உள்ள காய்கள் பழுக்காமல் இருப்பதால், அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசியுள்ள ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியர், “சேர்வராயன் மலைத் தொடரில் ஏற்காடு, நாகலூர், பட்டிப்பாடி வேலூர், கொளகூர், வெள்ளக்கடை, செம்ம நத்தம் உள்பட பல கிராமங்களில், அராபிகா, சந்திரகிரி உள்ளிட்ட வகைகளில், காபி பயிர் 7,000 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது.
நடப்பாண்டு ஏப்ரல், மே மாதங்களில் பெய்த மழையால், காபி செடிகளில் பூ பூத்து, காய்கள் அதிகரித்தன. வழக்கமாக, நவம்பர் மாதங்களில் காபி பழங்கள் பழுத்துவிடும். இதைத் தொடர்ந்து, நவம்பரிலேயே செடிகளில் இருந்து, காபி பழங்கள் அறுவடை செய்யப்பட்டு விடும்.
ஆனால், நடப்பாண்டு நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே ஏற்காட்டில், மழையுடன் கடும் பனிப்பொழிவும் நிலவுகிறது. எனவே, காபி செடிகளில் பழங்கள் பழுக்காமல் உள்ளன.
இதனால், பல கிராமங்களில் காபி செடிகளில் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. கொளகூர் உள்பட சில கிராமங்களில் மட்டும் அறுவடை தொடங்கியுள்ளது.
பெரும்பாலான இடங்களில், காபி செடிகளில் பழங்கள் பழுக்காமல் இருப்பதால், காபி அறுவடையில் வழக்கத்தை விட, ஒரு மாதம் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், இதனால் காபி விளைச்சலில் பாதிப்பு ஏற்படாது” என்று கூறியுள்ளார்.
இதனிடையே, ஏற்காட்டில் தொடரும் கடும் பனிப்பொழிவால், காபி அறுவடை தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வருவாயை எதிர்பார்த்திருந்த விவசாயிகள் பலர் கவலையடைந்துள்ளனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: இறால் துவையல்
மாமல்லபுரத்தில் பயங்கரம்… கார் மோதி 5 பெண்கள் பலி!
“நீ கூட்டிட்டு வந்த ஆளுங்க கை தட்டல பாத்தியா” :சூரியை கிண்டல் செய்த இளையராஜா