கொப்பரை தேங்காய்களை மாலையாக அணிந்து வந்த தென்னை உற்பத்தியாளர்கள்!

Published On:

| By Minnambalam

தமிழ்நாடு மாநில தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் நட்பு அமைப்பினர் கொப்பரை தேங்காய்களை கழுத்தில் மாலையாக அணிந்தவாறு மனு கொடுப்பதற்காக நேற்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
”புதுக்கோட்டை மாவட்டத்தில் 30,000க்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக வீழ்ச்சி அடைந்துள்ள தேங்காய்களின் விலையால் தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு கொப்பரை தேங்காய் விலையை ரூ.150 ஆக உயர்த்த வேண்டும்.
அதேபோல் தென்னை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் வழங்கவும் சத்துணவு திட்டத்தில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தவும் அரசு வழிவகை செய்ய வேண்டும். தேங்காய் ஏற்றுமதியில் உள்ள இடர்பாடுகளை களைய மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினர். மேலும் இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

-ராஜ்

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share