யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக சென்னையில் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். Coaching center in Chennai for UPSC students
2024ஆம் ஆண்டு நடந்த யுபிஎஸ்சி தேர்வு முடிவு கடந்த 22ஆம் தேதி வெளியானது. இதில் 57 பேர் தமிழ்நாட்டில் இருந்து தேர்வானார்கள். இதில் 50க்கும் மேற்பட்டோர், ‘நான் முதல்வன்’ பயிற்சி திட்டத்தில் பயின்றவர்கள். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் சட்டப்பேரவையில் பெருமிதமாக பேசியிருந்தனர்.
இந்தநிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 24) சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அவர் பேசும் போது, “நாம் மேற்கொண்ட தீவிரமான முயற்சிகளின் பயனாக, இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து 57 மாணவர்கள் பல்வேறு அகில இந்தியப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்கள். இதில் கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால், இவர்களில் 50 பேர் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்றுப் பயனடைந்திருக்கக்கூடியவர்கள் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் போற்றத்தக்க இந்த வெற்றியினை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், தேர்வில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்த வேண்டும். அதற்காக சென்னையில் இருக்கக்கூடிய செனாய் நகர் பகுதியில் 500 மாணவர்கள் தங்கிப் பயிலக்கூடிய வகையில், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய ஒரு பயிற்சி மையம் 40 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
அதுமட்டுமல்ல, இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு பாராட்டு விழா நிகழ்ச்சியினை நாளை மறுதினம் அவர்கள் பயிற்சி பெற்ற அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் நடத்திடவும், அதில் நான் கலந்துகொள்ளவும் இருக்கிறேன். கடைக்கோடித் தமிழ் இளைஞர்களின் கனவுகளையும் நனவாக்குவதே இந்த திராவிட மாடல் அரசின் முழுமுதற் கடமை.அதனை தொடர்ந்து செய்வோம் என்ற உறுதியினை அளித்து அமைகிறேன்” என்று கூறினார். Coaching center in Chennai for UPSC students