Pakistan : டி20 உலகக்கோப்பையில் இருந்து லீக் சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான் அணியை அதன் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்து வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் ’குரூப் ஏ’ பிரிவில் இடம்பெற்றிருந்தது பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி.
அந்த அணி அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் தோல்வியை சந்தித்த நிலையில் லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது.
இதனையடுத்து பாகிஸ்தான் அணியையும், அதன் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனையும் அந்நாட்டு ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இப்படி ஒரு அணியை பார்த்ததில்லை!
இந்த நிலையில் உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது குறித்தும், அதற்கு காரணம் என்ன என்பது குறித்தும் கேரி கிர்ஸ்டன் நேற்று (ஜூன் 17) செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.
அவர் கூறுகையில், “பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை. அவர்கள் அதை ஒரு அணி என்று அழைக்கிறார்கள், ஆனால் அது ஒரு அணி அல்ல. அவர்கள் ஒருவரையொருவர் ஆதரிக்கவில்லை; அனைவரும் பிரிந்துள்ளனர். நான் பல அணிகளுடன் வேலை செய்துள்ளேன், ஆனால் நான் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை எங்குமே பார்த்ததில்லை” என்று கிர்ஸ்டன் கடுமையாக சாடியுள்ளார்.
போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற கிர்ஸ்டன், டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களின் தேர்வு மற்றும் உடற்தகுதி குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
ஆனால் அதனை பாகிஸ்தான் அணி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. அதுவும் அந்த அணியின் பரிதாப முடிவுக்கு காரணம் ஆகியுள்ளது.
இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் அணி குறித்து கேரி கிரிஸ்டன் கடுமையாக சாடியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலானது.

ஹர்பஜன் சிங் ஆதரவு!
இதற்கிடையே கிர்ஸ்டனின் விமர்சனத்தை சுட்டிக்காட்டி மீண்டும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வரும்படி ஹர்பஜன் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அங்கே உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் கேரி .. மீண்டும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வாருங்கள். கேரி கிர்ஸ்டன் அரிய மனிதர்களில் ஒருவர். சிறந்த பயிற்சியாளர். 2011 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் உள்ள அனைவருக்கும் நண்பர்” என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சென்னையில் ‘மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி’: டெண்டர் கோரிய சிஎம்டிஏ!
