தடுப்பூசி : மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

Published On:

| By Balaji

தமிழ்நாட்டின் மக்கள்தொகைக்கு ஏற்ப ஒன்றிய அரசிடமிருந்து தடுப்பூசிகள் வரப்பெறாததால் நிலவும் தட்டுப்பாட்டை நீக்க தடுப்பூசிகள் வழங்கவும், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழ முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்று கடந்த வாரம் பிரதமருக்கு கடிதம் எழுதினேன். இதுதொடர்பாக எங்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் தங்களை சந்தித்து ஆலோசித்தார்கள்.

ADVERTISEMENT

தற்போது மத்திய அரசே குறிப்பிட்ட நிறுவனம் மூலம் அதை இயக்குவதற்கு முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலையில் தடுப்பூசி அவசரத் தேவை என்பதைக் கருத்தில்கொண்டு, மாநில அரசின் கீழோ, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழோ உடனடியாகத் தடுப்பூசி மையத்தை இயக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கிட வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் தேசிய சொத்தான தடுப்பூசி மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர நாங்கள் பரிபூரண ஆதரவை அளிக்கத் தயாராக இருக்கிறோம்.

ADVERTISEMENT

கடந்த ஒரு மாதத்தில் அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் காரணமாகத் தடுப்பூசி குறித்தான அச்சம் மக்களிடம் இருந்து நீங்கியுள்ளது. அதிகளவிலான மக்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் மாநிலத்தில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல தமிழ்நாட்டின் மக்கள் தொகை, கொரோனா பரவல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தடுப்பூசிகள் ஒதுக்கப்படுவதில்லை. தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க, மத்திய அரசு மற்றும் பிற வழிகள் மூலம் சிறப்பு ஒதுக்கீடாக 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்.

தற்போது, தமிழகத்திற்கு கூடுதலாக 40 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டதற்கு மத்திய அரசுக்கு நன்றி. இருப்பினும், இந்த ஒதுக்கீடு தமிழகத்தின் தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்யாது. தமிழகத்திற்கு மேலும் அதிக தடுப்பூசிகள் ஒதுக்க வேண்டும். தமிழகத்தை போன்று மக்கள்தொகையுள்ள மாநிலங்களுக்கு எந்தளவு தடுப்பூசி ஒதுக்கப்படுகிறதோ, அதே அளவு தமிழகத்துக்கும் ஒதுக்க வேண்டும். ஜூன் மாதத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை இந்த வாரத்திலேயே அளிக்க வேண்டும். இதன்மூலம் தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்த முடியும். இதில், தாங்கள் தனிக்கவனம் செலுத்தி, இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share