சூலூர் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இதில் தொடர்புடைய கார்த்திக் மற்றும் மோகன் ஆகிய இருவரைக் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரிடமும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலமைச்சர் விஜய் உறுதி
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசிய முதலமைச்சர் விஜய், சிறுமியைத் தீவிர சித்திரவதைக்கு உள்ளாக்கிக் கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் முன் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என உறுதி அளித்துள்ளார். மேலும், அக்குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
இதற்கிடையில், தேசிய மகளிர் ஆணையம், இக்கொலை வழக்கு குறித்து அடுத்த 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு (DGP) உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
