டெல்டா பாசனத்திற்காக முதல்வர் ஸ்டாலின் மேட்டூர் அணையை இன்று (ஜூன் 12) திறந்து வைத்தார். cm stalin Water released from Mettur Dam
சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரியின் குறுக்கே 120 அடி உயரத்தில் மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது.
திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் விவசாயத்துக்கு முக்கிய நீர் ஆதாரமாக இந்த அணை உள்ளது.
சுமார் 17 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரால் பாசன வசதி பெறுகின்றன.
ஆண்டுதோறும் மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும். அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே இந்த தேதியில் நீர் திறக்கப்படும்.
2011 முதல் 2019 வரை தொடர்ச்சியாக காலதாமதமாக திறக்கப்பட்ட மேட்டூர் அணை 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் உரிய நேரத்தில் திறக்கப்பட்டது.
2022ல் மே 24ஆம் தேதி முன்கூட்டியே திறக்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட்டாலும், கர்நாடகாவில் இருந்து போதிய நீர் வராததால் முன்கூட்டியே தண்ணீர் நிறுத்தப்பட்டது.
2024 ஆம் ஆண்டு போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் ஜூன் 12-ம் தேதிக்கு பதிலாக ஒரு மாதத்திற்கு மேல் கழித்து ஜூலை 28ஆம் தேதி தான் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மேட்டூர் அணையில் 114 அடி தண்ணீர் இருப்பதால் ஜூன் 12ஆம் தேதியான இன்று டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
இதற்கான ஆய்வு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்துள்ளார். அணையின் வலதுபுற கரையில் உள்ள பட்டனை அழுத்தி நீரை திறந்து வைத்தார். முதல் கட்டமாக 3000கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து வெளியேறிய நீரில் மலர் தூவி முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.
இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 7,000 கனஅடியாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. cm stalin Water released from Mettur Dam
