பகுதி நேர ஆசிரியர்கள், இடை நிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களது கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 22) மூன்றாவது நாளாக கூடியது அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டம், இடைநிலை, பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “அரசு ஊழியர்கள் போராடிக் கொண்டிருப்பதை மிகுந்த கவலையோடு, வருத்தத்தோடு, அக்கறையோடு நம்முடைய உறுப்பினர் தங்கமணி இங்கே குறிப்பிட்டிருக்கிறார். இந்த அக்கறை உங்கள் ஆட்சியில் ஏன் இல்லை?
எங்களைப் பொறுத்தவரை, ஏதாவது கோரிக்கை வைத்து போராடுவது அவர்களின் உரிமை.
ஆனால், உரிமையோடு போராடக்கூடிய அந்த போராட்டத்தைக்கூட முடிக்க வேண்டும், அது தொடரக்கூடாது என்ற நல்லெண்ணத்தோடு தொடர்ந்து அமைச்சர்கள் அவர்களை எத்தனையோ முறை அழைத்து பேசி, அதை எல்லாம் முழுக்க தீர்க்கவில்லை என்று சொன்னாலும் 95 முதல் 99 சதவிகிதம் தீர்த்து வைத்திருக்கிறோம்.
நாங்கள் TESMA கொண்டுவரவில்லை, ESMA கொண்டுவரவில்லை.
இரவோடு இரவாக அவர்களைப்போய் கைது செய்யவில்லை. ஜெயிலில் அடைக்கவில்லை. இதெல்லாம் கடந்தகால அ.தி.மு.க. ஆட்சியில் நடந்தது. எங்கள் ஆட்சியில் இல்லை. இப்போதும் சொல்கிறேன். நாங்கள் அரசு ஊழியர்களுடைய போராட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.
அதுமட்டுமல்ல, நம்முடைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடியவர், முதலமைச்சராக இருந்தபோது அரசு ஊழியர்கள் எந்தெந்த வகையில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கொச்சைப்படுத்தி பேசியதை எல்லாம் இந்த நாடு மறந்துவிடவில்லை.
23 ஆண்டுக்கால பிரச்சினையை நாங்கள் தீர்த்து வைத்திருக்கிறோம். தீர்த்து வைத்ததுடன் அரசு ஊழியர் சங்கங்கங்களைச் சார்ந்த பொறுப்பாளர்கள் எல்லாம் கோட்டையில், இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு முதலமைச்சர் அறைக்குள்ளேயே வந்து எனக்கு இனிப்பு ஊட்டியது, நான் அவர்களுக்கு இனிப்பு ஊட்டிய காட்சி எல்லாம் நீங்கள் தொலைக்காட்சியிலே பார்த்திருப்பீர்கள்.
அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். அந்த மகிழ்ச்சி உங்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் எதையும் செய்யவில்லை, எதையும் செய்யவில்லை என்று திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் செய்யவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதுதான் நான் வைக்கக்கூடிய கோரிக்கை.
இன்னும் சில பிரச்சினைகள் இருக்கின்றன. நான் முழுவதையும், நூற்றுக்கு நூறையும் நிறைவேற்றிவிட்டேன் என்று சொல்லவில்லை. இன்னும் ஒன்றிரண்டு சதவீதம் இருக்கிறது. சத்துணவு அமைப்பாளர்கள், அதேபோன்று அங்கன்வாடி அமைப்பாளர்கள் இவர்களையெல்லாம்கூட அழைத்துப் பேசிக் கொண்டிருக்கிறோம்.
பகுதிநேர ஆசிரியர்களும் ஒரு பக்கத்திலே போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டங்கள் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றையெல்லாம் நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை.
அவர்களையெல்லாம் அவ்வப்போது அழைத்துப் பேசி, அவர்களுடைய கோரிக்கையை எந்த அளவிற்கு நிறைவேற்ற முடியும் என்பதை சிந்தித்து, நிச்சயம் சொல்கிறேன், உறுதியாகச் சொல்கிறேன் அந்தக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். அதில் எந்த கவலையும் பட வேண்டாம்” என்று குறிப்பிட்டார்.
