அரியலூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே வெற்றியூர் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் நடத்தி வரும் நாட்டு பட்டாசுகள் தயாரிக்கும் ஆலையில் இன்று (அக்டோபர் 8) வெடி விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 5 பேர் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வெடி விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில்,
“அரியலூர் மாவட்டம், வெற்றியூர் மதுரா, விரகாலூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (9. 10. 2023) காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
விபத்து நடைபெற்ற இடத்திற்குச் சென்று, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகிய இருவரையும் அனுப்பி வைத்துள்ளேன்.
மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐந்து நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்
காவிரி விவகாரத்தில் திமுக இரட்டை நிலைப்பாடு: வானதி சீனிவாசன்
