ADVERTISEMENT

முக அடையாளம் மூலம் குற்றவாளிகளை கண்டறியும் செயலி!

Published On:

| By Balaji

காவல்துறையின் பயன்பாட்டிற்காக முக அடையாளம் மூலம் குற்றவாளிகளை கண்டறியும் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(அக்டோபர் 4) தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்துள்ளார்.

முக அடையாளம் கண்டறியும் மென்பொருளானது (Face Recognition Software), ஒரு தனி நபரின் புகைப்படத்தைக் காவல் நிலையங்களில் (Crime and Criminal Tracking Network & Systems) CCTNS-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நபர்களின் புகைப்படத் தரவுகளோடு ஒப்பிட்டு அடையாளம் கண்டறியப் பயன்படுகிறது. இதுவரை, 5.30 லட்சம் புகைப்படங்கள் CCTNS-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

எஃப்ஆர்எஸ் மென்பொருளைக் காவல் நிலையத்தில், இணையதள வசதியுள்ள கணினியிலும், களப்பணியின்போது எஃப்ஆர்எஸ் செயலியைக் கைப்பேசியிலும் காவல் அலுவலர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இச்செயலியின் மூலம் குற்றவாளிகள், சந்தேக நபர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத உடல்கள் ஆகிய புகைப்படங்களைத் தரவுகளில் உள்ள புகைப்படங்களுடன் ஒப்பிட்டு அடையாளம் கண்டறியலாம்.

இச்செயலியின் மூலம் ஒப்பீடு செய்யப்பட்ட புகைப்படத்தில் உள்ள நபர், வேறொரு காவல் நிலைய வழக்கில் தொடர்புடையவராக இருந்தால், காவல் அலுவலர்கள் இச்செயலியின் மூலமே சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அந்நபரைப் பற்றிய தகவல் அனுப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இச்செயலியைப் பயன்படுத்தி, காவல் அலுவலர்கள் ரோந்துப் பணி, வாகனத் தணிக்கை மற்றும் இதர காவல் பணிகளை மேற்கொள்ளும்போது, குற்றவாளிகள், சந்தேகத்திற்குரிய நபர்களின் புகைப்படம் மூலமாக அவர்களின் முழு குற்றப் பின்னணியினையும் எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த செயலியானது, குற்றங்களைக் கண்டுபிடிக்கவும், குற்றத் தடுப்புப் பணிகளைச் செவ்வனே மேற்கொள்ளவும் காவல் துறையினருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

ADVERTISEMENT

வருங்காலங்களில் சிசிடிவி வீடியோ பதிவுகளில் உள்ள ஒரு நபரின் முகத்தை அடையாளம் கண்டறிய ஏதுவாக, எஃப்ஆர்எஸ் செயலியில், வீடியோ பகுப்பாய்வு வசதி ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், சந்தேகத்துக்குரிய நபர்களோ, தேடப்படும் குற்றவாளிகளோ அல்லது காணாமல் போனவர்களோ பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் மற்றும் திருவிழாக்கள் போன்ற பொது இடங்களில் நடமாடினால், அவர்களை எளிதாகக் கண்டுபிடிக்க இயலும்.

மேலும், கலவரம் அல்லது பெருந்திரளாக மக்கள் கூடியுள்ள பகுதிகளில் உள்ள மக்களின் எண்ணிக்கை விவரத்தைக் கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட பகுதியின் பாதுகாப்புக்குத் தேவையான காவலர்களைப் பணியமர்த்த பயன்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share