தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூலை 22 ஆம் தேதி கோவை வருகிறார். 23ஆம் தேதி பொள்ளாச்சியில் தலைவர்களின் சிலைகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. mk stalin
தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வகையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் 22ஆம் தேதி கோவை விமான நிலையம் வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்புகள் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பின்னர் காரில் செல்லும் முதல்வர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் உடுமலைப்பேட்டையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
22-ந் தேதி திருப்பூர் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட கோவில்வழி பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். வேலம்பாளையத்தில் புதிய அரசு மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையத்தை திறந்து வைக்கும் முதல்வர் உடுமலை பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார், அண்ணா, அம்பேத்கர் சிலைகளையும் திறந்து வைக்கிறார்.
இதையடுத்து 23ஆம் தேதி பொள்ளாச்சி உடுமலை ரோடு பகுதியில் உள்ள நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டம் நிறைவேற காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராஜர், சுப்பிரமணியன், மகாலிங்கம் ஆகிய தலைவர்களின் சிலையை திறந்து திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் பவன் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
மேலும் உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைப்பதோடு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேச உள்ளார். பின்னர் திருப்பூர், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய இடங்களில் ரோடு ஷோ நடத்துகிறார்.
இதைத்தொடர்ந்து கோவை வரும் முதல்வர் தனியார் ஹோட்டலில் நடைபெறும் கோவைக்கான மாஸ்டர் பிளான் 2041 திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.
இந்தக் கூட்டத்தில் அதிகாரிகள் பொதுமக்கள் தொழில்துறையினர் மக்கள் பிரதிநிதிகள் என பல தரப்பினரும் பங்கேற்க உள்ளனர். கோவை வரும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க திமுக நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.
முதல்வர் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு வர உள்ள நிலையில் ஊரக மற்றும் மாநகர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
