பீகாரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்தி வரும் வாக்காளர் உரிமை யாத்திரையில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 28) பங்கேற்கிறார்.
பீகாரில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திடீரென வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்ற முகாம்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இந்த சிறப்பு முகாமில் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவை குடியுரிமை ஆவணங்களாக ஏற்கப்படவில்லை. இதனால் 65 லட்சம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொன்ட இந்த நடவடிக்கை கடும் எதிர்ப்புக்குள்ளாகி இருக்கிறது. இந்த விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கின. உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன.
இதனிடையே பீகாரில், ‘வாக்காளர்களின் உரிமை யாத்திரை’யை கடந்த 17-ந் தேதி ராகுல் காந்தி தொடங்கினார். ராகுலின் இந்த யாத்திரையில் பல லட்சக்கணக்கான பொதுமக்கள் அலை அலையாக பங்கேற்று வருகின்றனர்.
ராகுல் காந்தியின் பேரணி இன்று நிறைவடைகிறது. இப்பேரணியின் நிறைவு பொதுக் கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை 7.30 மணியளவில் தனி விமானத்தில் பீகார் மாநிலம் பாட்னாவுக்கு புறப்பட்டுச் சென்றார் முதல்வர் ஸ்டாலின்.
