ஆட்சியும் மழையும் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு!

Published On:

| By Kavi

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் விடாமல் மழை பெய்து கொண்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

சென்னை கோபாலபுரத்தில் ஸ்ரீ குப்தா பவன் அறக்கட்டளை சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்குத் திருமணம் இன்று(நவம்பர் 20) நடைபெற்றது. மொத்தம் 54 ஜோடிகளுக்குத் திருமணம் நடந்தது.

ADVERTISEMENT

மணமக்களை வாழ்த்தி முதல்வர் ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார். திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்டோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்திப் பேசிய ஸ்டாலின் , “உங்களது கனவுகள் எல்லாம் நிறைவேறட்டும்” என்றார்.

ADVERTISEMENT

கோபாலபுரம் பற்றிப் பேசிய மு.க.ஸ்டாலின், “கலைஞர் கோலோச்சிய இடம். இந்தியத் துணைக் கண்டத்திற்கே ஒரு தலையாய இடமாக, வரலாற்றில் மறக்கமுடியாத இடமாக இருக்கிறது.

எத்தனையோ குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்கள் எல்லாம் வந்து போயிருக்கிறார்கள். இத்தகையைச் சிறப்புக்குரிய பகுதியில் உங்களுடைய திருமணம் நடைபெற்றிருக்கிறது.

ADVERTISEMENT

உடலால் ஏற்பட்ட குறைபாட்டைத் தன்னம்பிக்கையால் வெல்லக் கூடிய ஆற்றல் படைத்த உங்களுக்கு மாற்றுத்திறனாளி என்று பெயர் சூட்டியவர் கலைஞர்.
எனக்கும், என் தங்கை கனிமொழிக்கும் மட்டுமல்ல, உங்களுக்கெல்லாம் பெயர் சூட்டியவர் கலைஞர்.

ஒரு முதல்வர் என்றால் காவல்துறை உள்ளிட்ட சில முக்கியமான துறைகளை மட்டும் கையில் வைத்துக்கொண்டு, மற்ற துறைகளைப் பிரித்து கொடுத்துவிடுவார்.

ஆனால் கலைஞரைப் பொறுத்தவரை மாற்றுத்திறனாளி துறையை ஏற்படுத்தி அதனை தனக்குக் கீழ் வைத்திருந்தார். இது என் நெஞ்சுக்கு நெருக்கமான துறை என்று கூறுவார்.

cm mk stalin Stalins speech on disabled people marriage function

திமுக ஆட்சி கலைஞர் தலைமையில் அமைந்தபோது, 36 மாதிரிகளில் 7,219 கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

நகரப்பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளோடு ஒருவர் கட்டணம் இல்லாமல் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. 9,30,909 பயனாளிகள் பதிவு செய்யப்பட்டு 5, 68,067 பேருக்கு அதற்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

1096 பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு என 2021-22ஆம் ஆண்டு காலகட்டத்தில் 813 கோடியே 63 லட்சம் ரூபாயும், 2022-23ஆம் நிதியாண்டில் 838 ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று மாற்றுத்திறனாளி களுக்கான திட்டங்கள் பற்றிப் பேசினார்.

மேலும் அவர், “இந்த அமைப்பின் சார்பில் சிம்மச்சந்திரன் பேசும்போது மாற்றுத்திறனாளிகளுக்கான 2 கோரிக்கை நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்தார். இப்படி கோரிக்கை நிலுவையிலிருந்தால் தான் நமக்குள் தொடர்பு இருந்துகொண்டே இருக்கும். அந்த கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றித்தர நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கலகலப்பாகப் பேசினார்.

மழை குறித்துப் பேசிய அவர், “ஆட்சிக்கு வந்தது முதல் விடாமல் மழை பெய்து கொண்டிருக்கிறது. கொரோனா பிடியிலிருந்து மீண்டு வந்ததும் மழை பிடித்துக்கொண்டது.

1996ல் நான் சென்னை மேயராக வந்தபோது மழை பெய்தது. தொடர்ந்து 20 நாட்கள் விடாமல் பெய்து கொண்டிருந்தது. எந்த வேலையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
அப்போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு உதவிகள் வழங்கிக்கொண்டிருந்தோம்.

அப்போது கலைஞர் நானும் பார்வையிட வேண்டும், மக்களுக்கு உதவி வழங்க வேண்டும் என்று கூறினார். அவரையும் மாநகராட்சி வேனில் அழைத்துக் கொண்டு சென்னை முழுவதும் சுற்றினோம்.

அப்போது கலைஞர், ‘ஸ்டாலின் மேயராக வந்தாலும் வந்தான் மழை பேயரா இருக்கு’ என வேடிக்கையாகச் சொன்னார். அதுபோன்று இப்போது தண்ணீர் பிரச்சினை ஏற்படாதவாறு மழை பெய்து கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு மழை பெய்த போது எப்படி இருந்தது, இந்த ஆண்டு எப்படி இருக்கிறது என உங்களுக்கு எல்லாம் தெரியும். 95 சதவிகித மழை வடிகால் பணிகள் முடிந்திருக்கிறது. மீதமுள்ள பணிகளும் செய்துமுடிக்கப்படும்.

உடல் நலிவு ஏற்பட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் பணிகள் செய்துகொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.

பிரியா

ஜமால் கஷோகி கொலை: சவுதி மன்னருடன் மோடியை ஒப்பிட்ட அமெரிக்கா

நடிகமணி டிவிஎன் -100

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share