மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது உருவப் படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 2) மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியடிகளின் 154-வது பிறந்தநாள் விழா, இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள காந்தி படம் மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள காந்தி சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், தமிழக அரசு சார்பில், சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக ஆளுநரும், முதல்வரும் ஒரே சமயத்தில் சென்று மரியாதை செலுத்தினர். முதலில் ஆளுநர் ஆர்.என்.ரவி காந்தியின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வணங்கினார். அதுபோன்று காந்தி திருவுருவப் படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் பள்ளி மாணவர்கள் மற்றும் காந்தியவாதிகள் நடத்திய நிகழ்ச்சிகளில், ராட்டையில் நூல் நூற்பது மற்றும் மாணவர்கள் பாடிய காந்தி பாடல்களை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கேட்டு ரசித்தனர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் இன்று காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது.
செல்வம்
