தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மீதான அமலாக்கத்துறையின் ரூ1,020 கோடி முறைகேடு புகார் தொடர்பாக முதல் கட்ட விசாரணை நடத்த விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் கே.என்.நேருவின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பொறியாளர்கள் நியமனங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கடந்த மாதம் தமிழக காவல்துறை தலைவர் (டிஜிபி)க்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி இருந்தது.
அத்துடன், ”மாநில காவல்துறை உடனடியாக முதல் தகவல் அறிக்கையைப் (FIR) பதிவு செய்து குற்றவியல் விசாரணையைத் தொடங்க வேண்டும்” எனவும் அமலாக்கத்துறை அக்கடிதத்தில் தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நடத்திய ஆலோசனையில், ‘முதல் கட்ட விசாரணை’ நடத்த உத்தரவிட முடிவு செய்யப்பட்டிருந்ததாக மின்னம்பலத்தில் பதிவு செய்திருந்தோம்.
தற்போது அமலாக்கத்துறை 2-வது கடிதம் ஒன்றையும் டிஜிபிக்கு அனுப்பி வைத்துள்ளது. அதில், அமைச்சர் நேருவின் நகராட்சி, நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் ஒப்பந்தங்களில் ரூ1,020 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது; இதற்கான நேரடி ஆதாரங்கள் உள்ளன; இந்த ஊழல் குறித்து விசாரித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்; அப்படி பதிவு செய்யாவிட்டால் காவல்துறையும் அந்த குற்றத்துக்கு உதவுவது போலாகும்” என எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் அமைச்சர் நேரு மீதான அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ‘முதல் கட்ட விசாரணை’ (பூர்வாங்க விசாரணை) நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
