இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் சார்பில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர், யுவன் சங்கர் ராஜா. தனது 14 வயதிலிருந்து திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் என ஆரம்பத்தில் இவர் அறியப்பட்டாலும், பின் நாட்களில் தனக்கென ஒரு தனி இடத்தை ரசிகர் மனதில் பிடித்தார்.
இசையமைப்பாளர் மட்டுமல்லாது, பியார் பிரேம காதல், மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்களையும் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார்.
யுவனுக்கு தேசிய விருது போன்ற தகுதியான அங்கீகாரங்கள் கிடைக்கவில்லை என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், ரசிகர்கள் அன்பைப் பெற்றிருப்பது தான் எனக்கு மிகப்பெரிய விருது என்று யுவன் அடிக்கடி குறிப்பிடுவார். யுவன் சங்கர் ராஜா திரையுலகத்திற்கு இசையமைக்க வந்து 25 ஆண்டுகள் ஆகிறது.
தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றியுள்ள பங்களிப்பை ஊக்குவிக்கும் விதமாக, சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் சார்பில், யுவனுக்கு இன்று (செப்டம்பர் 3) கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. யுவன் சங்கர் ராஜாவுக்கு சத்தியபாமா பல்கலைக்கழக வேந்தர் மரியஜீனா ஜான்சன் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா டாக்டர் பட்டம் வழங்கியதை, அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
செல்வம்
நடிகையாக சென்று அம்மாவாக வந்திருக்கிறேன்: அமலா