வாடகைத் தாய் சர்ச்சை தொடர்பாக நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் விளக்கம் அளித்துள்ளதாக விசாரணை குழு தெரிவித்துள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாரா இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அவர்களது திருமணம் இருதரப்பு பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில் திருமணமாகி இன்னும் 5 மாதங்கள் கூட முடிவடையாத நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக இருவரும் அறிவித்தார்கள்.
யாரும் எதிர்பார்க்காத நிலையில் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்நிலையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றது குறித்து விசாரணை நடத்துமாறு பலதரப்பிலிருந்தும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து இருவரிடமும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி மருத்துவ பணிகள் துறை இயக்குனருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
அதன்படி ஒரு மருத்துவர் உட்பட 3 பேர் கொண்ட குழு நயன்தாரா – விக்னேஷ் சிவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் இரட்டை குழந்தைக்கு வாடகை தாயாக இருந்தது கேரளாவைச் சேர்ந்த நயன்தாராவின் நெருங்கிய உறவினர் என்பது தெரியவந்தது. அவர் தான் துபாயில் நயன்தாரா முதலீடு செய்துள்ள சில தொழில்களை கவனித்து வருகிறார்.
மேலும் சென்னையில் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனையையும் அதிகாரிகள் கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தங்களது திருமணம் தொடர்பான சில முக்கியமான ஆவணங்களை நயன் விக்கி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதில், “நயன்தாரா – விக்னேஷ் இருவரும் 6 வருடங்களுக்கு முன்பே பதிவுத்திருமணம் செய்து கொண்டதாகவும், கடந்த டிசம்பர் மாதமே வாடகைத் தாய்முறையில் குழந்தை பெற பதிவு செய்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
குழந்தை பெற்றெடுத்த வாடகை தாயான பெண்ணை வணிக ரீதியில் பணம் கொடுத்து தொடர்பு கொள்ளவில்லை. நெருங்கிய உறவினர் என்ற முறையில் அவரது முழு சம்மதத்தின் பேரிலேயே அவர் குழந்தையை பெற்றெடுத்தார்.
கர்ப்ப காலத்தில் அந்த வாடகைத் தாயை முழுவதுமாக ஒரு மருத்துவ குழு கண்காணித்து கொண்டே இருந்தது. அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ தேவைகளும் செய்து கொடுக்கப்பட்டது.

இந்தியாவில் ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது. அது தங்களை கட்டுப்படுத்தாது என்றும் குறிப்பிட்டுள்ளதாக விசாரணை குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வாடகைத் தாய் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை வரை கிடைக்க வாய்ப்பு உண்டு. சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நிலையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த தகவல் மூலம் விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா