2024 : சங்கி முதல் கங்குவா பிளாப் வரை… சினிமா உலகம் சந்தித்த சம்பவங்கள்!

Published On:

| By Kumaresan M

2024 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல முக்கிய சம்பவங்கள் நடந்துள்ளன. சங்கி வார்த்தை முதல் கங்குவா பிளாப் வரை என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

தனது அப்பாவை வைத்து லால் சலாம் எனும் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்தார். அதன், இசை வெளியீட்டு விழாவில், “எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. இன்னைக்கு நான் தெளிவா சொல்றேன். அவர் சங்கி கிடையாது” என பேசினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா அனைத்து மதத்தையும் விரும்பும் ஆன்மீகவாதி, அப்படியிருக்கையில் அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள்? என்பதுதான் அவரின் பார்வை” என்றார்.

மலையாள படமான மஞ்சுமல் பாய்ஸ் தமிழகத்தில் ஹிட் அடித்தது. கமலின் குணா படத்தில் இடம் பெற்ற கண்மணி அன்போடு பாடல் அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டதால், தமிழகத்தில் இந்த படம் நல்ல வசூலை குவித்தது. அதோடு குணா குகையை பார்க்கவும் மக்கள் ஓடினர்.

கேரளாவில் கடந்த 2017ஆம் ஆண்டு முன்னணி நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் வழியில் பாலியல் கொடுமைக்கு உள்ளானார். இதையடுத்து, மலையாள படவுலகில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் பற்றி விசாரணை செய்ய ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. இதையடுத்து, பாலியல் வன்கொடுமை புகார்கள் புற்றீசல் போல வெளி வந்தன. ஆனால், யார் மேலும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நடிகர் மன்சூர் அலிகான் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில், த்ரிஷாவை பாலியல்‘ தொல்லை செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, நீதிமன்றத்துக்கும் மன்சூர் அலிகான் சென்றார். அப்போது, நீதிமன்றம் மன்சூருக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்தது.

சமந்தா அவரது கணவர் நாக சைதன்யாவை விவகாரத்து செய்ததற்கு தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகன் கே.டி.ராமாராவ்தான் காரணம் என தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா ஒரு பேட்டியில் பேசினார். சமந்தா மீது அமைச்சர் ஆசைப்பட்டார் என்கிற ரீதியில் சுரேகா பேச சர்ச்சை வெடித்தது. இதையடுத்து, சுரேகா மன்னிப்பு கேட்டார்.

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியிடத்தில் இருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அதே வேளையில், ஏற்கனவே நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்திருந்த தனுஷ், ஐஸ்வர்யா முறைப்படி விவாகரத்து பெற்றனர்.

தனது திருமணம் தொடர்பான குறும்படத்தில் தனுஷின் நானும் ரவுடிதான் படத்தில் இடம் பெற்றிருந்த 3 நிமிட காட்சிகளை அனுமதி பெறாமல் பயன்படுத்தியிருந்தார். இதனால், நயன்தாராவிடத்தில் ரூ10 கோடி கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து, இருவருக்கும் மோதல் வெடித்தது. நயன்தாரா தனுஷ் பற்றி பக்கம் பக்கமாக பேசினாலும், தனுஷ் ஒரு வார்த்தை திறக்கவில்லை.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது மனைவி சைரா பானுவை பிரிந்தார். இதுவும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பல சினிமா பிரபலங்களை போலவே விஜய்யும் அரசியல் களத்துக்கு வந்துள்ளார். வெற்றிகரமாக முதல் மாநாட்டையும் நடத்தி விட்டார். முழு நேர அரசியலுக்கு முன் கடைசியாக ஒரு படம் நடித்துவிட்டு வருவதாக கூறியிருக்கிறார். அந்த படம் தற்போது உருவாகி வருகிறது.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த கங்குவா படம் பிளாக் ஆனது. நடிகை ஜோதிகா கங்கணம் கட்டிக் கொண்டு அறிக்கை வழியாக விளக்கமளிக்க, நெட்டிசன்கள் அவர் மீது பாய்ந்தனர்.

ஹைதரபாத்தில் புஷ்பா 2 படம் வெளியான போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் பலியானார். இந்த விவகாரத்தில் படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். தடையை மீறி தியேட்டருக்கு படம் பார்க்க வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக போலீசார் அல்லு அர்ஜுன் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

2024 ஆம் ஆண்டு நடிகர் சேசு, செவ்வாழை ராசு, பிஜிலி ரமேஷ், டெல்லி கணேஷ், நேத்ரன், டேனியல் பாலாஜி, அடடே மனோகர் போன்ற நடிகர்கள் இறந்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel