ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்ககூடிய ‘பத்துதல’ திரைப்படம் மார்ச் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இதனையொட்டி, இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு கடந்த 24ம் தேதி சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு நடிகை சாயிஷா பேசுகையில், ”நான் மீண்டும் என் வீட்டுக்கு வந்தது போல ஒரு உணர்வு ‘பத்து தல’ படப்பிடிப்பில் ஏற்பட்டது. ஒரு சூப்பரான பாடலை ரகுமான் சார் இசையில் பிருந்தா மாஸ்டர் நடன அமைப்பில் கொடுத்ததற்கு நன்றி. கெளதம் இந்தப் படத்தில் வேறு நபராக இருக்கிறார். அவரது உழைப்புக்கு வாழ்த்துகள். எஸ்.டி.ஆருடன் நான் சேர்ந்து நடித்ததில்லை. ஆனால், அவரது இந்தப் படத்தில் நானும் ஒரு அங்கம் என்பது மகிழ்ச்சி.
கடைசியாக எனக்கு எல்லாவிதமான ஆதரவும் கொடுத்த என் கணவர் ஆர்யாவுக்கு நன்றி. அவர் சொல்லித்தான் இந்தப் பாடல் நான் செய்தேன். அவரைப் போன்ற ஒரு கணவர் கிடைத்ததுக்கு நான் கொடுத்துவைத்திருக்க வேண்டும். உங்கள் அனைவருக்கும் இந்தப் பாடல் நிச்சயம் பிடிக்கும்.” என்றார்.

நடிகர் கெளதம் கார்த்திக் பேசுகையில், ”பத்து தல’ படத்தில் எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. கிருஷ்ணா சாரும் அவரது டீமும் அருமையாக வேலை பார்த்திருக்கிறார்கள். என்னுடைய மொத்தத் தோற்றத்தையுமே மாற்றி இருக்கிறார்கள்.
இந்தக் கதாபாத்திரத்தில் என்னைப் பார்க்கும்போதே பெருமையாக இருக்கிறது. என்னைக் கொடுமைப்படுத்தி இருப்பதாக இயக்குநர் சொன்னார். இந்தத் தொழிலுக்கு வந்துவிட்டு வேலை பார்ப்பதை எப்போதும் நான் கொடுமையாகவே நினைத்தது இல்லை.
நான் பிறப்பதற்கு முன்பே என் தாத்தா இறந்து விட்டார். அவரது தொழிலில் நான் இறங்கி பார்க்கிறேன் என்றால் அதை விட வேறு சந்தோஷம் இல்லை. இது என் கோயில். அதுதான் எனக்கு சாப்பாடு போடுகிறது. அதற்காக எந்த விசயத்தையும் நான் தாங்கிக் கொள்வேன்.
சாயிஷாவுடன் நடனம் ஆட பயமாக இருந்தது. சாயிஷாவுக்கு இணையாக நடனம் ஆட முடியாது என பிருந்தா மாஸ்டரிடம் கேட்டு எனக்கு நடனத்தைக் குறைத்துக் கொண்டேன். அடுத்து சிம்பு அண்ணன். இசை வெளியீட்டு விழாவில் அவர் என்னைப் பற்றி பேசியதைக் கேட்டு நான் அழுதுவிட்டேன். அவருடைய ரசிகர்களில் நானும் ஒருவன். படப்பிடிப்புத் தளத்தில் வேலையையும் மீறி அவர் என்னிடம் சில கதைகளைச் சொன்னார்.
அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. என்ன கதாபாத்திரம் என்றாலும் சரி அவர் எப்போது கூப்பிட்டாலும் சம்பளமே வாங்காமல் செல்லத் தயாராக இருக்கிறேன். கூப்பிடுங்கள் அண்ணா. திரையரங்குகளில் ‘பத்து தல’ பார்த்துவிட்டு சொல்லுங்கள்.” என்றார்.

நடிகர் சிலம்பரசன் பேசுகையில், ”அன்று இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களைச் சந்தித்தேன். பத்திரிகையாளர்களை அங்கு சந்திக்க முடியவில்லை என்பதால், இன்று இங்கு வந்தேன். சிம்பு வருவாரா என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். அப்படி எல்லாம் இல்லை. வந்துவிட்டேன் நான்.
மேடையில், அன்று கெளதம் மேனன் சார் பற்றி பேச மறந்துவிட்டேன். எனக்குத் தெரிந்து ‘விடிகே2’ பண்ண முடியுமா என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு இப்போது வரும் பல படங்களிலும் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். ’பத்து தல’ வந்தால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி.
மதுகுருசாமி நடிப்பிற்காக தன்னைத் தயாராக்கிக் கொண்டவர். அவருக்கான இடம் காத்திருக்கிறது. ஒளிப்பதிவாளர், வசனகர்த்தா அனைவரும் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் பல நடிகர்கள் இருக்கிறபோது எப்படி அவர்களைச் சமாளிக்கப் போகிறார் இயக்குநர் என்ற கேள்வி இருந்தது.
ஆனால், சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்திற்குப் பிறகு இத்தனை நடிகர்களுக்கு திரையில் சரியான இடம் கொடுத்து, இயக்குநர் கிருஷ்ணா இந்தப் படத்தை முடித்திருக்கிறார். அவரது திறமைக்கு சரியான இடம் உண்டு. சாயிஷா அருமையாக நடனம் ஆடி இருக்கிறார்.
’பத்து தல’ படம் நான் ஒத்துக் கொள்ள முக்கியக் காரணம் கெளதம் கார்த்திக்தான். எந்தவிதமான கஷ்டத்தையும் ஜாலியாக எடுத்துக் கொள்வார். அந்த குணத்துக்காகவே அவர் பெரிய இடம் அடைய வேண்டும். இந்தப் படத்தில் அவரது ஆக்ஷன் காட்சிகளை ரசித்துப் பார்த்தேன். கஷ்டமான ஆக்ஷன் காட்சிகளை ரொம்பவே எளிதாகச் செய்துள்ளார். தயாரிப்பாளர், என் நண்பர் ஞானவேல் ராஜாவுக்கு நன்றி. ஸ்டுடியோ க்ரீனுக்கு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியாக அமைய வேண்டும்.” என்றார்.
இராமானுஜம்
கவிக்கோ மன்றத்தில் அண்ணா, கலைஞர் படம் ஏன் இல்லை?: கொளுத்திப் போட்ட கோவி.லெனின்