தமிழ் சினிமா வியாபாரிகள், சினிமா ஆர்வலர்கள், ரசிகர்கள் மட்டுமல்ல அரசியல் வட்டாரமும் எதிர்நோக்கியுள்ள திரைப்படம் விஜய் நாயகனாக நடித்துள்ள வாரிசு,
அஜித்குமார் நடித்துள்ள துணிவு என இரண்டு படங்களும் ஜனவரி 12 அன்று வெளியாக உள்ளது.
இரண்டு படங்களையும் விளம்பரம் செய்யும் பணியை சம்பந்தபட்ட தயாரிப்பு நிறுவனங்கள் மேற்கொண்டுவருகின்றன.
ஒரு திரைப்படம் பற்றிய எதிர்மறையான விமர்சனங்கள், சமூக வலைதளங்களில் வெளிவரும் தனி மனித கருத்துகள் படத்திற்கான இலவச விளம்பரமாக மாறிவிடும்.
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய் அணிந்து வந்த உடைகள், அதில் அவர் நடந்துகொண்டதை பற்றி இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட கருத்து அனைவரது கவனத்திற்குள்ளாகியுள்ளது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.
விஜய் இந்த விழாவிற்கு மிகவும் எளிமையான உடையில், வந்திருந்தார். பச்சை கலரில் சட்டையும், வெள்ளை நிறத்தில் பேண்ட்டும் அணிந்து வந்திருந்தார்.
ஜேம்ஸ் வசந்தன் இது பற்றி தனது முகநூல் பக்கத்தில் நேற்று எழுதியிருப்பதாவது,
“வாரிசு பட விழா தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தது. தற்செயலாக ஒரு கணம் எட்டிப்பார்த்தேன். விஜய் பேசிக்கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே அவர் தோற்றம் மனதைச் சற்று நெருடியது.

அவர் தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரம்மாண்ட விழா மேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம் என்று தோன்றியது. அது எளிமை என்று அவர் நினைத்திருக்கலாம்; அல்லது அவர் ரசிகர் வாதிடலாம்.
எளிமையும், அவைப் பொருத்தமும் வெவ்வேறு விஷயங்கள். இதைப் பொதுவாகத்தான் சொல்கிறேன். நாம் ஒரு வேலைக்கு, நேர்முகத் தேர்வுக்கு போகும்போது ஏன் அவ்வளவு பொறுப்பாக பார்த்துப் பார்த்து உடையணிந்து செல்கிறோம்?,
ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ற தோற்ற வரைமுறை உண்டுதானே? ஒரு நடிகனின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே கிரகிக்கிற, பின்பற்றுகிற பாமர ரசிகர் மேல் கதாநாயகர்கள், அதுவும் விஜய் போன்ற உச்சபட்ச நாயகன் ஏற்படுத்துகிற தாக்கம் அதிதீவிரமானது.
தன் திரை நாயகனை அன்றாட வாழ்வில் ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலிக்கிற கடைநிலை இளைஞனுக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுக்கவேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.
எந்த நிகழ்வுக்கு எப்படி உடையணிந்து செல்லவேண்டும் என்பதை அவன் எங்கே போய் கற்றுக்கொள்வான்? சினிமாவும், கிரிக்கெட்டும் உயிர்மூச்சாக ஆகிவிட்ட இந்தியாவில் இத்துறைகளில் உள்ளவர்கென்று சில பொறுப்புகள் உள்ளன,
நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். நீங்கள் திரைப்படங்களில் எல்லாவித ஆடம்பர ஆடைகளையும் அணிந்து சலித்துப்போய் நிஜவாழ்வில் இப்படி எளிமையாக இருக்க விரும்புவதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனாலும் பொதுமேடையாயிற்றே, வெறித்தனமான இளைஞன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறானே.
ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும், ஆந்திராவிலும் கூட யாருமே இந்த அம்சத்தில் அலட்சியம் காட்டுவதில்லை.
நட்சத்திரங்கள் வசதியானவர்கள் என்பது வெட்டவெளிச்சந்தானே. யாரும் உங்களைத் தவறாக நினைக்கமாட்டார்கள். தன் நாயகன் அழகாக வந்தால் முதலில் மகிழ்பவன் உங்கள் ரசிகன்தான்.
முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள். விடுமுறைகளில் மனம்போல் அணிந்து மகிழுங்கள்.
இந்த நடைமுறை வரைமுறைகளை உங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞருக்குக் கற்றுக்கொடுங்கள் என பதிவிட்டுள்ளார்.
இராமானுஜம்
யூனியன் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை: சிசிடிவி காட்சிகளை வைத்து தேடுதல்!
ரூ. 42,000 ஐ நெருங்குகிறது தங்கம் விலை: வெள்ளி விலையும் உயர்வால் அதிர்ச்சி!