“விஜய் சேதுபதி நடிப்பில், சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‘மாமனிதன்’ திரைப்படம் இவர்களது கூட்டணியில் உருவான முக்கிய படங்களில் ஒன்றாகும்.
ஒரு எளிய மனிதன் தன் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை மதங்கள் கடந்த நட்பால் அன்பால் எவ்வாறு எதிர் கொண்டு கடக்கிறான் என்பதுதான் இந்தப் படத்தின் ஒருவரிக் கதை.
இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்காக சமீபத்தில் சென்னை தாகூர் பிலிம் சென்டரில் திரையிடப்பட்டது.
இந்த சிறப்புக் காட்சியில் அரசியல் கட்சி தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், ஆர்.பத்ரி, ராஜசேகரன் (மார்க்சிஸ்ட்) காங்கிரஸ் கட்சி சார்பாக எஸ்.திருநாவுக்கரசர், இதயதுல்லா, மனித நேய மக்கள் கட்சி தலைவர்கள் ஜவாஹிருல்லா, அப்துல் சமது, பிரபல பத்திரி்கையாளர் விஜயசங்கர், தமிழ் வேள்வி சதுரர் சத்திய வேல்முருகனார், திரைக் கலைஞர்கள் விமல், கலா, இயக்குநர்கள் பிருந்தா சாரதி, மணி பாரதி, தமயந்தி, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை க.உதயகுமார், லயோலா திருச்சபை தந்தை, ஜான், காட்சியியல் ஊடகத்துறை பேராசிரியர் சித்ரா, சமரசம் இதழாசிரியர் சிக்கந்தர் கவிஞர்கள் அய்யப்ப மாதவன், ரத்திகா மாஸ்டர், படத் தயாரிப்பாளர் பிரிட்டோ என பங்கேற்று அவரவர் பார்வையில் படம் சம்பந்தமாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிகழ்வை எழுத்தாளர் இரா.தெ.முத்து ஒருங்கிணைப்பு செய்திருந்தார். படம் தயாராகி மூன்று வருடங்களாக பைனான்ஸ் பிரச்சினை காரணமாக முடங்கி இருந்ததை பலகட்ட முயற்சிகளுக்கு பின் நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே..சுரேஷ் முயற்சியில் வெளியானது. படைப்புரீதியாக விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும் வசூல் அடிப்படையில் வெற்றி கிடைக்கவில்லை.
இந்த நிலையில் வரும் ஜூலை 15-ம் தேதியன்று ஆஹா ஓடிடி தளத்தில் மாமனிதன் வெளியாகவுள்ளது.
-இராமானுஜம்