ஹவாலா பண முதலீடு தொடர்பாக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
‘நுவ்விலா’ என்ற படத்தின் மூலம் கடந்த 2011 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் அறிமுகமான விஜய் தேவரகொண்டா, ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகரானார். ’கீதகோவிந்தம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்.
சாதாரண பின்னணியை கொண்ட விஜய் தேவரகொண்டா, இப்போது பல கோடிகளில் சம்பளம் பெறுகிறார்.
இந்நிலையில், இந்தி திரையுலகிலும் கால் பதிக்கும் வகையில் லைகர் என்ற இந்தி திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்தார்.
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ந் தேதி ரிலீசான இப்படத்தை பூரி ஜெகன்நாத் உடன் இணைந்து நடிகை சார்மி தயாரித்து இருந்தார்.
இந்தியா முழுவதும் வெளியான இப்படத்தில் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசனையும் நடிக்க வைத்து இருந்தனர். நடிகை ரம்யா கிருஷ்ணனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சுமார் 125 கோடி செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இப்படம் எதிர்பார்த்த அளவில் வசூல் பெறவில்லை.
இந்நிலையில், லைகர் படத்தை தயாரிக்க ஹவாலா பணம் முதலீடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது.
படத்தின் தயாரிப்பாளரான சார்மி, இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்றது. சுமார் 12 மணி நேரம் விஜய் தேவரகொண்டாவிடம் விசாரணை நீடித்தது. அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா,
“பிரபலமானவராக இருப்பதால் சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும், சில பிரச்சனைகள் மற்றும் அசாதாரணமான சூழல்கள் இருக்கும். இது ஒரு அனுபவம், இது தான் வாழ்க்கை.
நான் என் கடமையை செய்தேன். நான் இங்கு வந்து அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தேன். அவர்கள் என்னை மீண்டும் அழைக்கவில்லை” என்றார்.
காலை 8 மணி அளவில் விசாரணைக்கு ஆஜரான விஜய் தேவரகொண்டா, இரவு 8.30 மணிக்கே விசாரணை முடிந்து வெளியே வந்தார். சுமார் 12 மணி நேரம் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
வாவ்.. வயசானாலும் கவர்ச்சி குறையாத ஸ்ரேயா..லேட்டஸ்ட் படங்கள் இங்கே!
இந்தியாவில் குறைந்து வரும் பேறுகால தாய், சேய் இறப்பு விகிதம்: காரணம் என்ன?