வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்துள்ள நடிகர் ஷாம் விஜய் குறித்து பல்வேறு சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
விஜய் நடிப்பில் முதன்முறையாக தெலுங்கு, தமிழ் என ஒரே சமயத்தில் வெளியாகியுள்ள படம் வாரிசு.
ஏற்கனவே தமிழில் தோழா என்கிற உணர்வுப்பூர்வமான படத்தை கொடுத்த இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இந்தமுறை விஜய்க்கும் அதேபோன்று ஒரு குடும்பப்பாங்கான நெகிழ்ச்சியான படத்தை கொடுத்துள்ளார்.
விஜய் படங்களை பொறுத்தவரை அவருடன் அந்த படத்தில் இணைந்து நடிக்கும் அத்தனை நட்சத்திரங்களும் ரசிகர்களிடம் கவனம் பெறுவார்கள்.

அந்தவகையில் வாரிசு படத்தில் சரத்குமார், பிரபு, ஷாம், பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், யோகிபாபு என பல முக்கிய நட்சத்திரங்கள் இதில் இணைந்து நடித்துள்ளனர்.
குறிப்பாக படத்தில் விஜய்யின் அண்ணன் கதாபாத்திரத்தில் படம் முழுவதும் அவருடன் இணைந்து பயணித்துள்ள நடிகர் ஷாமின் நடிப்பிற்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
வாரிசு படத்தின் வெற்றியிலும் அதற்கு கிடைத்துவரும் வரவேற்பிலும் உற்சாகமடைந்துள்ள நடிகர் ஷாம், வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து பல சுவாரசியமான செய்திகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
“20 வருடங்களுக்கு முன்பு குஷி என்கிற படத்தில் அவருடன் ஒரே ஒரு காட்சியில் இணைந்து நடித்து இருந்தேன். அதன்பிறகு இப்போது வாரிசு படத்தில் படம் முழுவதும் அவருடன் பயணிக்கும் விதமாக அவரது சகோதரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஸ்ரீகாந்த் என பல சீனியர்கள் நடித்திருப்பதால் வாரிசு குடும்பத்தில் நான் தான் ஜூனியர் என்று கூட சொல்லலாம்.

இந்த படத்தின் படப்பிடிப்பில் நிறைய விஷயங்களை விஜய் சாரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். படப்பிடிப்பில் உடன் நடிக்கும் எந்த நடிகர்களையும் ஈகோ இல்லாமல் பார்த்துக்கொண்டார்.
எந்த ஒருவரை பற்றியும் தவறாக ஒரு வார்த்தை பேச மாட்டார். படப்பிடிப்பின்போது அவர் போன் பயன்படுத்தவே மாட்டார்.
அப்படியே யாரிடமாவது பேசவேண்டும் என்றாலும் உணவு இடைவேளையில் மட்டுமே பேசுவார். அதை பார்த்துவிட்டு நானும் படப்பிடிப்பு சமயங்களில் எனது போனை தூக்கி போட்டுவிட்டேன்.
படப்பிடிப்பு சமயத்தில் எல்லோருடனும் கலகலப்பாக பேசுவார். மற்ற நேரங்களில் பெரும்பாலும் அடுத்து நடிக்க கூடிய காட்சிகளை பற்றியே தான் அவர் அசை போட்டுக்கொண்டிருப்பார்.
அதேபோல எந்த ஒரு காட்சிக்கும் ரிகர்சல் பார்க்க மாட்டார். என்னுடன் இணைந்து நடிக்கும் காட்சிகளில் என்னிடம் அதுபற்றி சிறிதாக கலந்துரையாடுவார்.
அதன்பிறகு நேரடியாக டேக் போய்விடுவார் அப்போது ஒரு மேஜிக் நடத்துவார் பாருங்கள், நிச்சயம் நம்மால் பிரமிக்காமல் இருக்க முடியாது.
கதாநாயகி ராஷ்மிகாவை பொருத்தவரை அவர் தேசிய அளவில் பிரபலம் ஆனவர். படப்பிடிப்பில் எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார்.
ஆனால் அவர் ஆரம்பத்தில் இருந்தே தீவிரமான விஜய் ரசிகை என்பதால். படப்பிடிப்பு தளத்தில் பெரும்பாலான நேரங்களில் அவர் விஜய்யையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பார்.
அந்த அளவிற்கு விஜய்யுடன் இணைந்து நடிப்பதையே நம்பமுடியாதது போல தான் காட்சியளித்தார்.

விஜய் சாரிடம் பேசும்போது, எப்படி அண்ணா நாளுக்கு நாள் இளமை ஆகிக்கொண்டே போகிறீர்கள், இதற்காக என்ன உணவு கட்டுப்பாடு மேற்கொள்கிறீர்கள் என கேட்டால், தினசரி பூரி, பொங்கல் தான் சாப்பிடுகிறேன், எப்பவாவது உடற்பயிற்சி செய்கிறேன் என சொல்லி ஆச்சரியப்படுத்தினார்.
படப்பிடிப்பு முடிவடைந்ததும் எங்களை எல்லாம் அவரது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்து அசத்தினார். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு பிடித்தமான உணவு அயிட்டங்களை அந்த விருந்தில் சேர்த்து இன்னும் ஆச்சர்யப்படுத்தினார்.
அப்போது தன் வீட்டில் உள்ள பணியாளர்களை எல்லாம் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு தன் கையாலேயே அனைவருக்கும் பார்த்து பார்த்து பரிமாறினார்.
விஜய் சாரிடம் கூட பேசும்போது துணிவு படமும் வாரிசுடன் தான் வருகிறது என்று சொன்னபோது ஹை ஜாலி 2 படமும் வரட்டும்.

பார்ப்போம் என்று அதையும் பாசிட்டிவாகத்தான் அணுகினார். இன்னொரு விஷயம் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.
துணிவு படத்திலும் வில்லனாக நடிக்க முதலில் எனக்குத்தான் அழைப்பு வந்தது. ஆனால் இயக்குநர் வினோத் கேட்ட தேதிகளும் வாரிசு படத்திற்கான எனது தேதிகளும் ஒரேசமயத்தில் இருந்ததால் என்னால் துணிவு படத்தில் நடிக்க முடியாமல் போனது.
அதேசமயம் அந்த கதாபாத்திரத்திற்காக என்னை யோசித்ததற்காக இயக்குநர் வினோத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஷாம் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
கலை.ரா