பொங்கல் பண்டிகையையொட்டி 2023 ஜனவரி 12 அன்று வெளியாகவிருக்கும் வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கிடையேயான போட்டிதான் இணையதளங்களில் வெளியாகும் இப்போதைய சூடானசெய்தி.
இதற்கு காரணம் அஜித்குமார்- விஜய் இருவருக்கும் சமூக வலைதளங்களில் அவர்களுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடவும் தேவைப்பட்டால் குறிப்பிட்ட செய்திகளை ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்யவும் தொழில்முறை படைகுழுக்கள் செயல்பட்டு வருகிறது.

படம் சம்பந்தப்பட்ட செய்திகளை அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அல்லது பத்திரிகை தொடர்பாளர்கள் ஊடகங்களுக்கு அனுப்புவதற்கு முன்பாக இவர்கள் மூலம் சமூக வலைதளங்களில் வந்து விடுகிறது.
வாரிசு, துணிவு இரண்டு படங்களும் 2023 பொங்கல் வெளியீடு என அறிவிக்கப்பட்ட பின்பு வாரிசு படத்தை பலவீனமாக்கும் முயற்சியில் அஜித்குமார் ரசிகர்களும், துணிவு படத்திற்கு எதிரான செய்திகளை விஜய் ரசிகர்களும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலக அளவிலும் இந்தப் போட்டி கடுமையாக இருக்கிறது என்கின்றனர்.
வாரிசு படம் தமிழகத்தில் வெளியாகாது, அப்படியே வந்தாலும் குறைவான திரையரங்குகளே கிடைக்கும் வெளிநாட்டில் தியேட்டரே கிடைக்காது என கூறப்பட்டது.
ஏனென்றால் துணிவு படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை சுமார் 18 கோடி ரூபாய்க்கு லைகா நிறுவனம் வாங்கியுள்ளது.

அஜித்குமார் நடிக்கும் அடுத்த படத்தை அந்நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இதன் காரணமாக துணிவு படத்திற்கு அதிகமான திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் முயற்சியை லைகா நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
வாரிசு படத்தின் வெளிநாட்டு திரையரங்க விநியோக உரிமை 40 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதனால் திரையரங்குகள் மூலம் கூடுதல் முன் தொகையை வாரிசு விநியோகஸ்தர் எதிர்பார்க்கிறார்.
கூடுதல் முன் தொகை கொடுக்க முடியாத, விரும்பாத திரையரங்குகளில் துணிவு படத்தை வெளியிட அட்வான்ஸ் இல்லை என்றாலும் லைகா நிறுவனம் ஒப்பந்தம் செய்து வருகிறது என கூறப்படுகிறது.
இதன் காரணமாக வாரிசு படத்திற்கு குறைவான திரையரங்குகள் உள்ள நாடுகளில் தியேட்டர் கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளது.
எடுத்துக்காட்டாக நார்வே போன்ற சின்ன நாட்டில் ஆறு திரையரங்குகள்தான் இருக்கின்றன. அவற்றில் நான்கு அல்லது ஐந்து திரையரங்குகளை துணிவு படத்துக்காக ஒப்பந்தம் செய்யும் முயற்சியை லைகா நிறுவனம் மேற்கொண்டு உள்ளது.
இராமானுஜம்