பிரபல மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம்(வயது 78) அவரது இல்லத்தில் நெற்றியில் அடிபட்ட நிலையில் இன்று மரணமடைந்தார்.
இவரது மரணம் திரையுலகினர் மத்தியில், பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவரை பற்றிய சில சுவாரசிய தகவல்களை பார்க்கலாம்.
வேலூரில் பிறந்த வாணி ஜெயராம், தன்னுடைய கனவை அடைவதற்காக எடுத்த முயற்சிகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. ஒரு இசை குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பின்னணி பாடகி வாய்ப்பை கைப்பற்றுவது என்பது தற்போதைய காலத்தை விட, அந்த காலத்தில் மிகவும் கடுமையான ஒன்றாகவே இருந்தது.
தன்னுடைய கனவை அடைவதற்காக சில தியாகங்களையும் செய்து தான் முன்னணி பாடகியாக ஜொலித்தார் வாணி ஜெயராம் என்பது உங்களுக்கு தெரியுமா?,
ஆம் வாணி ஜெயராம் இசை மீது வைத்திருந்த தீராத காதல் தான் இவரை பிரபல பாடகியாக நிலை நிறுத்தியது.
இசை குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர், ஆரம்ப காலத்தில் டி ஆர் பாலசுப்ரமணியம், ஆர் எஸ் மணி ஆகியவரிடம் கர்நாடக இசை பயின்றவர்.
பின்னர் 1969 ஆம் ஆண்டு ஜெயராம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய இசை கனவை எப்படி தொடர்வது என்று தெரியாமல், இருந்த போது வாணிக்கு துணையாக நின்றவர் அவரின் கணவர் ஜெயராம் தான்.
கணவருடன் மும்பையில் செட்டில் ஆன வாணி ஜெயராம், வங்கியில் பணிபுரிந்து வந்தார்.

மேலும் இவரின் இசை ஞானத்தை அதிகரிக்கும் விதமாக, ஹிந்துஸ்தானி இசை போன்றவை கற்றுக்கொண்டது மட்டும் இன்றி, தொடர்ந்து பாலிவுட் திரையுலகில் பின்னை பாடகிக்கான வாய்ப்புகளையும் தேடி வந்தார்.
ஆரம்பத்தில் சில விளம்பரங்களில் பாடிய அனுபவமும் இவருக்கு உண்டு.கணவரின் துணையோடு தன்னுடைய இசை கனவை நிறைவேற்ற வாய்ப்பு தேடி வந்த வாணி ஜெயராமுக்கு, 1971 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் வெளியான ‘குட்டி’ என்ற திரைப்படத்தில், பாடும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தில் ‘போலே ரே பப்பி ஹரா’ என்ற பாடலை வசந்த் தேசாயின் இசையில் பாடி இருந்தார் வாணி ஜெயராம்.
இவரின் முதல் பாடலே சூப்பர் ஹிட் பாடலாக அமைந்ததோடு, பல இசையமைப்பாளர்களாலும் தேடப்படும் பாடகியாக வாணி ஜெயராமை உருவெடுக்க செய்தது.
தன்னுடைய பாடகி கனவிற்காக, கை நிறைய சம்பளம் பெரும் வங்கி வேலையை தூக்கி போட்ட வாணி ஜெயராம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட சுமார் 19 மொழிகளில் 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்