உண்மை நடக்கும்… பொய் பறக்கும்: எஸ்.ஜே.சூர்யா சொன்ன வதந்தி டயலாக்!

சினிமா

‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதளத் தொடரைத் தொடர்ந்து, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் வலைதள தொடர் ‘வதந்தி- ஃபேபிள் ஆஃப் வெலோனி’. இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி இருக்கும் இத்தொடரில் வெலோனி எனும் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார்.

இவருடன் எஸ்.ஜே.சூர்யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதள தொடருக்கு சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார். அமேசான் பிரைம் வீடியோவில் டிசம்பர் இரண்டாம் தேதி முதல் வெளியாகவிருக்கும் ‘வதந்தி வலைதளத் தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (நவம்பர் 22) நடைபெற்றது.

இவ்விழாவில் இந்த தொடரின் தயாரிப்பாளர்களான புஷ்கர் – காயத்ரி பேசுகையில், ”பிரைம் வீடியோவுடன் எங்களுக்கு இது இரண்டாவது பயணம். பிரைம் வீடியோ, தரமான படைப்புகளை சர்வதேச அளவிலான மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஒப்பற்ற சிறந்த டிஜிட்டல் தளம்.

‘வதந்தி’ தொடரின் கதை கருவை சொன்னவுடன், இதன் மீது உள்ளார்ந்த ஈடுபாடுடன் அக்கறையும் செலுத்தி, படைப்பிற்கு தங்களது ஒத்துழைப்பை தொடர்ந்து அளித்து வருகிறார்கள். அமேசான் பிரைம் வீடியோவுடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கும் சிறப்பான அனுபவத்தை அளித்திருக்கிறது.

எஸ்.ஜே.சூர்யா சிறந்த மனிதர். அளவற்ற நேர்நிலையான ஆற்றலை கொண்டவர். இந்த தொடரில் நடிப்பின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் இயக்குநரான ஆண்ட்ரூ லூயிஸ், லயோலா கல்லூரியில் வகுப்பறை தோழர்.

பட்டப் படிப்பு முடித்தவுடன் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவியாளராக சேர்ந்தவர். அதனால், அவருக்கும் எங்களுக்குமான இணக்கம், தொடர்பு அதிகம். இந்தத் தொடரில் சஞ்சனா என்ற இளம் பெண்ணை கதாநாயகியாக அறிமுகப்படுத்துகிறோம்.
நீண்டகால அவகாசம் கொண்ட வலைதளத் தொடர் என்பது தமிழுக்கு இப்போதுதான் அறிமுகமாகி வரவேற்பை பெற்று வருகிறது. தமிழுக்கு இது ஒரு புதிய படைப்புலகமாக அறிமுகமாகியிருக்கிறது.

vadhandhi series sj surya acting

பொதுவாக தமிழ் திரையுலகத்தில் இரண்டு அல்லது இரண்டரை மணி நேர திரைப்படத்திற்காகத்தான் திரைக்கதை எழுதுவோம். அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஆறு அல்லது ஆறரை மணி நேரம் கொண்ட எட்டு அத்தியாயங்களுக்கான கதையை எழுதுவது என்பது சவாலானது.

எங்களது தயாரிப்பில் வெளியான சுழல் தொடரிலேயே நாங்கள் கடினமாக உழைத்து தான் திரைக்கதை எழுதினோம். ஆனால் ‘வதந்தி வலைதள தொடரை இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் எட்டு அத்தியாயங்களுக்கான முழு திரைக்கதையும் எழுதி, அவரே இயக்கியிருக்கிறார்” என்றார்.

”இந்தத் தொடரின் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் என்னுடைய உதவியாளர். அவரது இயக்கத்தில் முதன் முதலாக வலைதள தொடரில் நடிப்பதை பெருமிதமாக நினைக்கிறேன். இவர் ஏற்கனவே 2017 ஆம் ஆண்டில் என்னிடம் ஒரு கதையை சொன்னார்.

அப்போது அவரிடம்,’ நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதனால் வலுவான கதையை எழுதி வா’ என்றேன்.
இந்த முறை அவர் நல்ல கதையுடன் வந்தார். திரில்லர் என்றாலே அதில் பொழுதுபோக்கு அம்சம் நிறைய இருக்கும்.

இதில் உணர்வுபூர்வமான கதைகளும் உண்டு. இது பார்வையாளர்களை பெரிதும் ஈர்க்கும். தயாரிப்பாளர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரியின் தெளிவான திட்டமிடல், பிரைம் வீடியோவின் சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பு, இயக்குநர் ஆண்ட்ரூ லூயிசின் கடின உழைப்பு இவையெல்லாம் எனக்கு கிடைத்த ஆசீர்வாதங்கள்.

அதாவது என்னுடைய உதவியாளரின் இயக்கத்தில் தயாராகி அமேசான் பிரைம் வீடியோ எனும் சர்வதேச அளவிலான புகழ்பெற்ற டிஜிட்டல் தளத்துடன் இணைந்து முதன்முதலாக வலைதள தொடரில் நடித்திருப்பதை பாக்கியமாக கருதுகிறேன்.

திறமையான இயக்குநர்களின் படைப்பின் மூலமாகத்தான், ஒரு நடிகர் சிறந்த நடிகராக புகழ் பெற முடியும். அந்த வகையில் என்னுடைய உதவியாளரின் இயக்கத்தில் ‘வதந்தி’ எனும் இந்தத் தொடரில் நடித்திருப்பதால், சிறந்த நடிகர் என்ற பெயர் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

‘உண்மை நடக்கும். பொய் பறக்கும்’ என இந்த தொடரில் ஒரு வசனம் இடம் பெற்று இருக்கிறது. கன்னியாகுமரி பகுதியில் உள்ள மக்கள் இயல்பாக பேசும் இந்த பேச்சு, இந்த தொடருக்கு பொருத்தமானது. டேக் லைனாக இணைத்துக் கொள்ளலாம்” என உருக்கமாகப் பேசினார், நடிகர் எஸ்.ஜே. சூர்யா.

vadhandhi series sj surya acting

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், ”வதந்தி – இந்த சமுதாயத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இருக்கிறது. பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால், மனிதன் தன்னுடைய பொழுதுபோக்கிற்கு கண்டுபிடித்த முதல் விசயமே வதந்திதான் என்று நான் நினைக்கிறேன்.

‘யாகவாராயினும் நா காக்க..’ என்னும் திருக்குறளில், யார் எதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றாலும், வாயிலிருந்து வெளியாகும் வார்த்தைகளையாவது கட்டுப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். இது திருக்குறள். இந்த திருக்குறளை இதுவரை வலிமையாகவும், கூர்மையாகவும் ரசிக்கும் வகையில் யாரும் கதையாகச் சொல்லவில்லை.

ஒருவேளை இதை நேர்த்தியாகச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். இதை எப்போது சொன்னாலும் நன்றாக இருக்கும் என நம்பினேன்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் அமேசான் பிரைம் வீடியோவின் அபர்ணா மேடத்தை மும்பையில் சந்தித்தேன். 20 நிமிடம் வதந்தி தொடரின் கதையை விவரித்தேன். அவர்கள் உடனடியாக கதையின் உள்ளடக்கத்தை துல்லியமாக புரிந்து கொண்டு உற்சாகத்துடன் பணிகளைத் தொடங்குமாறு கூறினார்.

அத்துடன் படைப்பாளிக்குரிய சுதந்திரத்தையும் வழங்கினார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதன் பிறகு 11 மாதங்கள் இந்த தொடருக்கான திரைக்கதையை எழுதினேன். தயாரிப்பாளர்களும், நண்பர்களுமான புஷ்கர் – காயத்ரி அவர்கள் இதன் திரைக்கதையை முழுவதுமாக வாசித்து, ஆங்காங்கே தங்களது மேலான ஆலோசனையை வழங்கினார்கள்.

என்னுடைய திரையுலக பயணத்தை எஸ்.ஜே.சூர்யாவிடமிருந்து தான் தொடங்கினேன். அவரையே இந்த தொடரில் இயக்கியிருப்பது என்னுடைய கனவு நனவானது போல் உணர்கிறேன். எஸ்ஜே.சூர்யா இயக்குநர் மற்றும் நடிகர். ஆனால் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் அவர் நடிகராக மட்டுமே இருந்தார்” என்றார்.

இராமானுஜம்

வசூலை வாரிக்குவித்த காந்தாரா: எத்தனை கோடி தெரியுமா?

வீரப்பனின் முழுக்கதை: வெப்தொடராக தயாரிக்க முடிவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *