ஓட்டுக்குப் பணம் வாங்கக் கூடாது என்று நடிகர் விஜய் சொல்லியிருப்பது நல்ல விஷயம் தான் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூன் 17) நடைபெற்றது.
சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும், பரிசுகளையும் வழங்கி கவுரவித்தார்.
பணம் வாங்கி வாக்களிக்காதீர்கள்
இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய நடிகர் விஜய், “தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் அவர்கள் பெற்றோரிடம் சென்று ‘அப்பா, அம்மா இனிமேல் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதீர்கள்’ என்று கூறிப்பாருங்கள்.
முயற்சி செய்து பாருங்கள்… நீங்கள் கூறினால் நடக்கும் என எனக்கு நம்பிக்கை உள்ளது. நீங்கள் தான் அடுத்தடுத்த ஆண்டுகளில் முதல் முறை வாக்காளர்களாக வர உள்ளீர்கள்” என்று தெரிவித்தார்.
மேலும் மாணவர்கள் அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் வரும் நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு மற்றதை விட்டுவிட வேண்டும் என்றும் மாணவர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தினார்.

விஜய் பேசியிருப்பது நல்ல விஷயம் தான்
நடிகர் விஜய்யின் பேச்சு தமிழக அரசியல் களத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “நடிகர் விஜய் பேசிய நிகழ்ச்சியை நான் இன்னும் பார்க்கவில்லை. ஓட்டுக்குப் பணம் வாங்கக் கூடாது என்று அவர் சொல்லியிருப்பது நல்ல விஷயம் தான்.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். இவர்கள் வரலாம், இவர்கள் வரக்கூடாது என்றெல்லாம் சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது” என்று தெரிவித்தார்.
வரவேற்கிறேன் வாழ்த்துகிறேன்
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் சேர்ந்து பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றவர் பாரிவேந்தர். தற்போது பாஜக நிலைப்பாட்டில் இருந்து வருகிறார்.
அவரும் நடிகர் விஜயின் பேச்சை வரவேற்று ட்விட் செய்துள்ளார். அதில், “நீங்கள்தான் நாளைய வாக்காளர்கள், வாக்கிற்கு பணம் வாங்க வேண்டாம் என்று உங்கள் பெற்றவர்களிடம் சொல்லுங்கள் என்ற விஜயின் அறிவுரையை வரவேற்கிறேன் வாழ்த்துகிறேன்” என்று பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை தருகிறது
திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், நடிகர் விஜயின் கல்வி தொடர்பான செயல்பாடுகள் நம்பிக்கையை தருகிறது என்றும், அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் பற்றி படிக்குமாறு மாணவர்களிடம் கூறியதற்கும் பாராட்டும் தெரிவித்துள்ளது.
விஜயின் பேச்சு வரவேற்புக்குரியது!
திமுகவை சேர்ந்த பிரமுகரும், இயக்குநருமான கரு பழனியப்பன் கூறுகையில்,
“விஜயின் இன்றைய பேச்சு வரவேற்புக்குரியது… ஆன்மிக அரசியல் என்று சொல்லாமல், அம்பேத்கர் பெரியார் காமராஜரை படியுங்கள் என்றார் .. அதைப்படித்தாலே அவர்கள் சரியாக வாக்களித்துவிடுவார்கள்… நன்றி விஜய்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர்களின் அரசியல் எனக்கு தெரியாது
அதே போன்று விஜயின் பேச்சு குறித்து கவிஞர் வைரமுத்துவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “அரசியலுக்கு நான் வருவேனா என்று கேட்டால் பதில் சொல்ல தெரியும். ஆனால் நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. தெரியாமல் பேசுவது உசிதமாக இருக்காது” என்றார்.
அமைச்சரவையில் நீடிக்கும் செந்தில் பாலாஜி: எடப்பாடி கண்டனம்!
பாஜக நிர்வாகி கைது: நிர்மலா சீதாராமன் vs சு.வெங்கடேசன்