இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என ரெட் ஜெயன்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
’அசுரன்’ திரைப்படத்தின் பட வெற்றிக்குப் பிறகு, பாவக்கதைகள் படத்தில் இடம்பெற்ற நான்கு பாகங்களில் ஒன்றான ‘ஓர் இரவு’ என்ற கதையை இயக்கி இருந்தார் வெற்றிமாறன்.
இதனை தொடர்ந்து எழுத்தாளர் ஜெயமோகனின் ’துணைவன்’ சிறுகதையை மையமாக கொண்டு ’விடுதலை’ படத்தினை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் கதை நாயகனாக போலீஸ் வேடத்தில் சூரியும், வாத்தியாராக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். இவர்களுடன் பவானி ஸ்ரீ, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடிக்கின்றனர்.
இப்படத்தின் மூலம் முதல் முறையாக இளையராஜா – வெற்றிமாறன் கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..

இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகி வரும் நிலையில் சத்தியமங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகள், திண்டுக்கலில் உள்ள சிறுமலை ஆகிய இடங்களில் முதல் பாகத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன..
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இன்று ( செப்டம்பர் 01 ) காலை 11 மணிக்கு புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிவி சேட்டிலைட் உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி பெற்றுள்ளது.
இதனுடன் சூரி,விஜய் சேதுபதியின் போஸ்டர்களும் வெளியிடப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் ‘உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார்’ என்ற குறளும் இடம்பெற்றுள்ளது.
அக்குறளின் பொருள் ‘பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள், சுவாசிக்கிற காரணத்தினாலேயே, உயிரோடிருப்பதாக நிச்சயமாகச் சொல்ல முடியாது’ என்பதாகும்.
மேலும் இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- க.சீனிவாசன்