விஜய்யின் வாரிசு படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள ஈவிபி ஸ்டுடியோ வளாகத்தில் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது.
விஜய் பங்கேற்கும் பாடல் காட்சி ஒன்றை படக்குழு படமாக்கிக்கொண்டு இருந்துள்ளனர், அரங்கிற்குள் இல்லாமல் திறந்தவெளியில் நடந்து வந்த அப்படப்பிடிப்பை டிரோன் மூலம் படம் பிடித்திருக்கிறது ஒரு தனியார் தொலைக்காட்சி.
படப்பிடிப்பு நடக்கும்போது அங்கு புகைப்படம் கூட எடுக்கக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அப்படிப்பட்ட இடத்தில் விஜய் நடனமாடிக் கொண்டிருப்பதை ட்ரோன் மூலம் தொலைவில் இருந்து படம் பிடித்தது கண்டு அதிர்ச்சியடைந்தது படக்குழு.
ட்ரோன் மூலம் யார் படம் பிடித்தது என்று தேடிப்போய்ப் பார்த்தால் ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் இருந்து அந்த டிரோனை இயக்கியிருக்கிறது தனியார் தொலைக்காட்சி நிறுவனம்.
ட்ரோனை இயக்கியவரையும், உடன் இருந்தவர்களையும் அள்ளிக்கொண்டு வந்த படக்குழு இது தவறான செயல் இல்லையா என கேட்க, அவர்கள் பத்திரிகை சுதந்திரம் என கூறியிருக்கின்றனர்.
இதனால், கைகலப்பு நடந்துள்ளது. இதன் காரணமாக படக்குழு மீது தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தயாரிப்பு நிர்வாகி மற்றும் ஆறு பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் உதயகுமார் என்பவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
ஸ்ரீகாந்த் – சங்கீதா நடிப்பில் சாமி இயக்கிய உயிர் படத்தை தயாரித்தவர்
உதயகுமார். ஷங்கர் உட்பட பலருக்கு மேலாளராகப் பணியாற்றியவர். பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கப்படும் படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது நடிகர் விஜய் நடிக்கும் படங்களுக்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
எந்தப்படக்குழுவாக இருந்தாலும் விஜய்யின் படப்பிடிப்பு எங்கே? எத்தனை மணிக்கு அவர் வரவேண்டும்? என்கிற தகவல்களை நேரடியாக விஜய்யிடம் பேசிவிட முடியாது, எல்லாத் தகவல்களும் உதயகுமார் மூலமாகத்தான் விஜய்யிடம் சென்று சேரும்.
படக்குழுவுக்கும் விஜய்க்கும் பாலமாக இருந்து வரும் அவர் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்படுமோ என்று கேள்வி எழுந்தது.
ஆனால், வெளியீட்டுத்தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் படப்பிடிப்பை ரத்து செய்யாமல் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறாராம் விஜய்.
இராமானுஜம்
10% இட ஒதுக்கீடு : உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு!
கனிமொழியிடம் இருந்து மகளிரணி பறிக்கப்பட்டதா?