‘மாமனிதனுக்கு’ டோக்கியோ திரைப்பட விருது!
‘யதார்த்த வாழ்வியல் இயக்குநர்’ என்று பெயரெடுத்திருக்கும் இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில், யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவான ‘மாமனிதன்’ திரைப்படம், கடந்த ஜூன் மாதம் வெளியானது.
விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்ட மாமனிதன்’, திரை அரங்குகளில் வணிகரீதியாக வெற்றிபெறவில்லை. படம் வெளியான குறுகிய காலகட்டத்தில் ‘ஆஹா’ ஓ. டி. டி. எனப்படும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி, ஒரு கோடிக்கும் மேலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு புதிய சாதனையைப் படைத்தது.
இப்படம் வெளியானவுடன் ஏராளமான சர்வதேச விருதுகளை, இந்த ‘மாமனிதன்’ பெறுவான் என திரையுலகினர் கணித்தனர். அதற்கேற்ற வகையில் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்று வருகிறது ‘மாமனிதன்’திரைப்படம்.
அந்த வரிசையில் அடுத்த விருதாக ‘மாமனிதன்’ படம் ‘ஆசிய நாடுகளுக்கான சிறந்த படம்’ என்ற விருதை வென்றுள்ளது. ஜப்பான் நாட்டில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்களில் ‘டோக்கியோ திரைப்பட விருது’ என்னும் சர்வதேச திரைப்பட விழாவும் ஒன்று.
சிறந்த திரில்லர், சிறந்த ஆக்சன், சிறந்த நகைச்சுவை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குநர் என இருபதுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் தகுதியான படைப்புகளையும், திறமையான கலைஞர்களையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விருதும், பதக்கமும் வழங்கி கௌரவித்து வருகிறது டோக்கியோ திரைப்பட விழா குழு.
இந்த ஆண்டு இதுவரை ஆசிய நாடுகளில் வெளியான திரைப்படங்களில் சிறந்த படமாக ‘மாமனிதன்’ தமிழ்ப் படத்தைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கி சிறப்பித்து இருக்கிறது.
திரைப்படத் துறை மற்றும் தொலைக்காட்சி துறையைச் சார்ந்த நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த படைப்பாளிகள் ஒருங்கிணைந்து வழங்கும் இந்த ‘டோக்கியோ திரைப்பட விருது’ சர்வதேச அளவிலான கலைஞர்களின் சிறந்த விருதாகக் கருதப்படுகிறது.
அம்பலவாணன்