லெஜண்ட் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ திரைப்படம் 45 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆனதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ், முதன்முறையாக 50 கோடி ரூபாய் செலவில் ‘தி லெஜண்ட்‘ படத்தை தயாரித்தது.
விளம்பரங்களில் தோன்றிய லெஜண்ட் சரவணன், திரைப்படத்தில் நடிக்கிறார் என்றவுடன் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், இவை எதைப் பற்றியும் கவலைப்படாத சரவணன் எல்லா விமர்சனங்களுக்கும் பதில் சொன்னார்.
உலகம் முழுவதும் திரையரங்குகளில் தி லெஜண்ட் படத்தை வெளியிட்டதன் மூலம் சுமார் 45 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆனதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

படத்தின் தொலைக்காட்சி உரிமை, ஓடிடி உரிமையை வியாபாரம் செய்ய முடியவில்லை என்று கடந்த சில நாட்களாக இணையதளங்களில் செய்தி வெளியாகி வருகிறது.
இருந்தபோதிலும் மனம் தளராத மைந்தனாக, சினிமாவில் எனக்கு போட்டி ரஜினிகாந்த் மட்டுமே என பவர்ஸ்டார் சீனிவாசன் பொதுமேடைகளில் கூறியது போல், தி லெஜண்ட் படத்தின் தொலைக்காட்சி உரிமை 20 கோடி ரூபாய்க்கும், ஓடிடி உரிமை 25 கோடி ரூபாய்க்கும் விற்பதற்கான பேச்சு வார்த்தை நடப்பதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது,
கோடம்பாக்க சினிமா வட்டாரத்தில் மட்டுமல்ல, ஓடிடி நிறுவனங்கள் மற்றும் தொலைக்காட்சி உரிமையாளர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓடாத ஒரு படம் எப்படி 45 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆனது என்கிற கேள்வி பத்திரிகையாளர்கள் மற்றும் சினிமா வியாபாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆனால் அதற்கான விடை இன்னும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் துவங்கப்பட்டுள்ளதாகவும் அது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
இராமானுஜம்