‘விலங்கு’ மற்றும் ’அயலி’ வெப் சீரிஸ்கள் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் கிளப்பில் நுழைந்திருப்பதாக ஜீ 5 ஓடிடி தளம் தெரிவித்து இருக்கிறது.
இது குறித்து நேற்று (மார்ச் 17 ) வெளியிடப்பட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, “ஜீ 5 ஓடிடி தளமானது கடந்த 12 மாதங்களில் தமிழ் சந்தைகளில் பார்வையாளர் அடிப்படையில் 54% மற்றும் செயல்பாட்டு அடிப்படையில் 63% அதிகரிப்பை கண்டு இருக்கிறது.
தமிழ் சார்ந்த படைப்புகளை ஜீ 5 தளத்தில் பார்க்கும் பார்வையாளனின் நேரமானது 23% அதிகரித்துள்ளது. இதில் தமிழ் படைப்புகளான ‘அயலி’ ‘விலங்கு’ ‘பேப்பர் ராக்கெட்’ ‘வலிமை’ உள்ளிட்ட படைப்புகளின் பங்கு அதிகம். குறிப்பாக ’அயலி’ மற்றும் ’விலங்கு’ ஆகிய படைப்புகள் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் கிளப்பில் நுழைந்து இருக்கிறது. இது எங்களுக்கு ஊக்கமளிக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ஜீ 5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா தனியார் சேனலுக்கு நேற்று (மார்ச் 17 ) அளித்துள்ள பேட்டியில் “ஜீ 5 இல், இந்த ஊக்கமளிக்கும் வரவேற்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
ஜீ 5 ஓடிடி தளத்தின் பிரத்யேக திரைப்படங்கள், பிளாக்பஸ்டர் திரைப்படங்கள், சர்வதேச விளையாட்டுகள், டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை பார்வையாளர்கள் இதயத்திற்கு நெருக்கமானவையாக இருக்கின்றன. முன்னோக்கிச் செல்லும்போது, வளர்ச்சிப் போக்கைத் தக்கவைத்துக்கொள்வதிலும், தமிழ் பொழுதுபோக்குத் துறையில் எங்கள் முதலீடுகளை அதிகரிப்பதிலும் எங்கள் கவனம் இருக்கும்.” என்று கூறியுள்ளார்.
மேலும், ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் -ன் தெற்கு தலைமை கிளஸ்டர் அதிகாரி சிஜு பிரபாகரன் கூறுகையில், “நாங்கள் துறையில் மிகவும் நம்பிக்கையான கண்ணோட்டத்துடனும் இந்த சந்தையைப் பற்றிய புரிதலுடனும் தொடர்ந்து இருக்கிறோம்.
இந்த ஆண்டின் எங்கள் ஆக்கப்பூர்வமான ஆய்வு, எங்கள் வரம்புகளை விரிவுபடுத்தி OTT -ல் மக்கள் எதிர்பார்ப்பது என்ன என்பது பற்றிய புரிதலை தந்திருக்கிறது. அவை பாரம்பரிய தடைகளையும் உடைத்திருக்கிறது. அதற்கு உதாரணம் அயலி. வரும் காலத்தில் மனதைக் கவரும் வகையில் அழுத்தமான கதைகளை உருவாக்குவதே திட்டமாக இருக்கிறது “என்று கூறியுள்ளார்.
இதனிடையே, கலையரசன் மற்றும் வாணி போஜன் நடித்துள்ள ’செங்களம்’ திரைப்படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் வரும் (மார்ச் 24) ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
2,3 நாட்கள் வந்தால் தேர்வெழுத அனுமதியா?: அன்பில் மகேஷ் பதில்!