லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை ‘பெட்டிக்கடை’, ‘பகிரி’ ஆகிய படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார்.
முக்கிய வேடங்களில் லால், எஸ்.ஏ. சந்திரசேகர்,வேல ராமமூர்த்தி, துருவா, ஸ்ரீபிரியங்கா, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 14) நடைபெற்றது இந்நிகழ்வில் படத்தின் இயக்குநர் இசக்கி கார்வண்ணன் பேசுகையில்,”சாதி சார்ந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்று இப்படத்தில் காட்டுகிறோம். நான் சந்தித்த அனுபவங்களை படமாக எடுத்திருக்கிறேன். பிறக்கும் போது அனைத்து குழந்தைகளும் சமமே. வளர்ந்த பிறகு தான் சாதி என்ற ஏற்றத்தாழ்வு வருகிறது. சாதியம், குலத்தொழில் குறித்து இப்படத்தில் கூறியுள்ளோம்” என்றார்.
பாடலாசிரியர் விவேகா பேசுகையில்,”அனைவரது வாழ்க்கையிலும் தாலாட்டு முதல் ஒப்பாரி வரை இசை கூடவே வரும். இப்படத்தில் ஒப்பாரி பாடல் ஒன்றை நான் எழுதியுள்ளேன். சாம் சி.எஸ். உணர்ச்சிப்பூர்வமாக இசையமைத்துள்ளார். இசக்கி கார்வண்ணன் திறம்பட இயக்கியுள்ளார். இவர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது” என்றார்.
எழுத்தாளர் ராமசுவாமி, “இயக்குநர் இசக்கி கார்வண்ணன் முதல் முறையாக கதை சொல்லும்பொழுது நான் வேறு விதமாக புரிந்து கொண்டேன். ஆனால், இந்த இயக்குநர் சிறந்த எழுத்தாளர் என்பதை இவரின் படைப்பை பார்க்கும்போது அறிந்துகொண்டேன். எனக்கு இப்படத்தில் வசனங்களும் குறைவு. இப்படத்தில் நிறைய காட்சிகளில் பிணமாகத்தான் நடித்துள்ளேன்” என்றார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் பொன்வண்ணன் பேசுகையில்,”எனக்கு இசக்கி கார்வண்ணனை பல வருடங்களாக தெரியும். சினிமாவைப் பற்றி பேசுவோம். ஒரு நாள் தொலைபேசி மூலம் என்னை தொடர்புகொண்டு ‘ஒரு கதை இருக்கு வாங்க சொல்லணும்’ என்று கூறி இக்கதையை கூறினார். அதன் பிறகு இந்த திரைப்படத்தில் நடிக்க சேரன், லால் என சரியான நடிகர்களை தேர்ந்தெடுத்தார். இயக்குநருக்கு மிக முக்கியமானது கதைக்கான நடிகர்களை தேர்ந்தெடுப்பது தான். அதற்கடுத்து இசையமைப்பாளர் முக்கியம். இந்த படத்தில் பாடல்கள் மிகக் குறைவு, ஆனால் பின்னணி இசை மிக முக்கியம் என்று சொல்லலாம். கதையில் முதல் ஃபிரேமில் இருந்து கடைசி ஃபிரேம் வரை நம்மை எங்கேஜிங்காக வைப்பது மிகவும் அவசியம். அது இந்த படத்தில் முழுமையாக வொர்க் ஆகியுள்ளது என்று நான் நினைக்கிறேன். ஒரு பார்வையாளனாக, ஒரு ரசிகனாக இந்த திரைப்படத்தை நான் ரசித்து பார்த்தேன்” என்றார்
நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி, “படத்தை பற்றி சொல்லவேண்டும் என்றால் ‘தமிழ்க் குடிமகன்’ என்ற தலைப்பே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகிறது. தமிழக அரசியல் சூழலில் சாதி பற்றி இப்படம் பேசுகிறது. வெற்றிகரமான படமாக இது அமையும் என வாழ்த்துகிறேன்” என்றார்.
நடிகர் சரத்குமார் பேசுகையில், “என் அன்பு சகோதரர் சேரன் நடித்த ‘தமிழ்க்குடிமகன்’ அனைவரும் பார்க்க வேண்டிய படம். உண்மை நிலையை எடுத்து கூறும் படமாக ‘தமிழ்க்குடிமகன்’ இருக்கும். குலத்தொழில் பற்றி இதில் பேசி இருக்கிறார்கள். அந்த முறையை உடைக்கின்ற படமாக ‘தமிழ்க்குடிமகன்’ இருக்கப்போகிறது என்றார்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ், “நிறைய திரைப்படங்களுக்கு நான் இசையமைத்திருக்கிறேன். ஆனால் இந்த படத்திற்கு இசையமைத்தது குறித்து மிகவும் பெருமை அடைகிறேன். நல்ல கதை என்பது வெளி உலகத்திற்கு தெரிய வேண்டும், கண்டிப்பாக இத்திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.
இயக்குநர் மற்றும் இத்திரைப்படத்தின் நாயகன் சேரன், “அனைவரும் திரையரங்குகளில் வந்து திரைப்படத்தை பார்க்க வேண்டும். புத்திசாலித்தனமான திரைப்படம் இது. சாதிகளை ஒழிக்க வேண்டும் போன்ற நிறைய நல்ல விஷயங்களை இத்திரைப்படத்தில் சொல்லி இருக்கிறோம்” என்றார்.
இராமானுஜம்
திராவிடர் கழக தலைவர் கி. வீரமணிக்கு ”தகைசால் தமிழர்” விருதை வழங்கினார் முதல்வர்!