பிரின்ஸ் படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் பெற்ற சம்பளத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கே.ஜே.ஆர். ஸ்டுடியோ மற்றும் 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ஹீரோ படத்தைத் தயாரிப்பதற்காக டேக் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்திடம் ரூ. 5 கோடி கடனாகப் பெற்றுள்ளது.
இந்த பணத்தை வட்டியோடு சேர்த்து 6 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாகத் திருப்பி தர வேண்டும் என்று டேக் என்டர்டெயின்மென்ட் நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ் கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆனால் அந்த பணத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோ நிறுவனம் திருப்பி தராததால் சமீபத்தில் வெளியான பிரின்ஸ் படத்திற்காக சிவகார்த்திகேயன் சம்பளமாகப் பெற்ற பணத்தைச் செலுத்த வேண்டும் என்று டேக் என்டர்டெயின்மென்ட் மற்றொரு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு இன்று (டிசம்பர் 21) உயர்நீதிமன்ற நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது டேக் என்டர்டெயின்மென்ட் தரப்பில்,
“2019 ஆம் ஆண்டு முதல் வழக்கு நிலுவையில் உள்ளதாலும் அயலான், டான், டாக்டர் போன்ற படங்களின் தயாரிப்பு பணிகளில் சிவகார்த்திகேயன் ஈடுபட்டுள்ளதால், பிரின்ஸ் படத்தில் பெற்ற சம்பளத்தை இந்த வழக்கின் கணக்கில் செலுத்தும்படி உத்தரவிட வேண்டும்” என வாதிடப்பட்டது.
சிவகார்த்திகேயன் தரப்பில், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடிகர் என்ற முறையில் சம்பளம் பெற்றுள்ளார். ஆனால் தயாரிப்பு பணிகளுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
சினிமா துறையில் அவருக்கு உள்ள நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் டேக் என்டர்டெயின்மென்ட் மனுத் தாக்கல் செய்துள்ளது என வாதிட்டார்.
மேலும், மேற்கண்ட 5 படங்களுக்கும் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் இல்லை என்பதற்கு ஆதாரமாக சென்சார் போர்டு சான்றிதழ்களும் தாக்கல் செய்யப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும், சிவகார்த்திகேயன் தரப்பு சமர்ப்பித்த சான்றிதழ்களையும் ஆராய்ந்த நீதிபதி சரவணன்,
பிரின்ஸ் படத்தின் தயாரிப்பு பணிக்கும், சிவகார்த்திகேயனுக்கும் தொடர்பு இல்லை என்பது உறுதி செய்யப்படுவதால்,
அவரது சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட முடியாது எனக் கூறி டேக் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மோனிஷா
பொன்முடிக்கு எதிரான வழக்கு: ஜனவரி 4இல் விசாரணை!