கமல்ஹாசன் காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகும் படம் இந்தியன் 2. ஷங்கர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகள், பஞ்சாயத்துக்களைக் கடந்து விரைவில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை லைகா தயாரிப்பு நிறுவனம் செய்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பைச் சென்னை எழிலகம் அருகே உள்ளே பொதுப்பணித்துறை அலுவலகப் பகுதிகளில் பத்து நாட்கள் நடத்துவதற்கு அனுமதி கேட்கப்பட்டது. அரசாங்க அலுவலகங்கள் இருக்கும் பகுதி, அரசு அலுவலக செயல்பாட்டுக்கு இடையூறாக இருக்கும் என்கிற காரணத்தை குறிப்பிட்டு சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டுமே படப்பிடிப்பு நடத்திக்கொள்ள அனுமதி தருவது வழக்கம்.
தொடர்ச்சியாக பத்து நாட்கள் அனுமதி வழங்க இயலாது என்று இந்தியன்-2 படக்குழுவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதி நடித்து வரும் மாமன்னன் படப்பிடிப்பு அங்கே வார நாட்களிலும் நடந்ததாகச் சொல்கிறார்கள்.
இதனால், அவர்களுக்கு மட்டும் அனுமதி தருவார்களா? நமக்கு இல்லையா? என்று ஷங்கர் கேட்டதாகச் சொல்லப்படுகிறது.

மாமன்னன் படப்பிடிப்புக்கு வாரநாட்களில் அனுமதி கொடுக்கப்பட்டதா? என்று அரசு வட்டாரங்களில் விசாரித்த போது, “உதயநிதி நடிக்கும் மாமன்னன் படப்பிடிப்பு அங்கே நடைபெற்றது உண்மைதான். ஆனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் அப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது.
ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடியாததால் திங்கட்கிழமையும் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டிருக்கிறார்கள். அப்போது அவர்களுக்கும் அனுமதி தர மறுக்கப்பட்டது. அதன்பின், கடும் முயற்சி, விளக்கங்களுக்குப் பின் சிறப்பு அனுமதி பெற்று திங்கட்கிழமை ஒருநாள் மட்டும் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஷங்கரை பொறுத்தவரை அவர் கூறுகின்ற இடத்தில் படப்பிடிப்புக்குத் தேவைப்படும் நாட்களுக்கு அனுமதி கிடைத்தால் மட்டுமே படப்பிடிப்பை அங்கே நடத்துவது வழக்கம். அதனால் இந்தியன் -2 படப்பிடிப்புக்கு வேறு இடம் தேட தொடங்கியுள்ளனர் தயாரிப்பு நிர்வாகிகள் தரப்பில்” என்கிறார்கள்.
இராமானுஜம்
Comments are closed.