’தி லெஜண்ட்’ பட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நிருபரின் கேள்விக்கு சரவணன் கூறிய பதில் கவனத்தை ஈர்த்துள்ளது.
’லெஜண்ட்’ சரவணன் நடிகராக அறிமுகமாகி உள்ள திரைப்படம் ‘தி லெஜண்ட்’. இந்த திரைப்படம் இந்த மாதம் 28ம் தேதி திரையரங்குகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. இதற்கான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மும்பை, கொச்சின் என நடந்து வருகிறது.
இதில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சரவணனிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதில் ஒருவர், ‘இந்த வயதில் நடிக்க வந்தது ஏன்? இன்னும் முன்னமே நடிக்க வந்திருக்கலாம் என தோன்றியது உண்டா?’ என கேள்வி எழுப்பினார்.
இதற்கு சரவணன் பதில் அளித்தபோது, “அமிதாப் இந்த வயதில் கூட நடித்து வருகிறார். ரஜினி, கமல், சரத்குமார் ஆகியோர் என்னைவிட வயது கூடியவர்கள். அவர்களும் இன்னும் நடித்து கொண்டு தானே இருக்கிறார்கள். அவர்களிடம் இந்த கேள்வியை கேட்டீர்களா? சினிமா என்பது எனக்கு கனவு. அந்த கனவை அடைய நான் வெளியே வியாபாரத்தில் உழைக்க வேண்டி இருந்தது. அதை நிறைவேற்றிய பிறகே என்னுடைய சினிமா கனவை நோக்கி வந்தேன். இப்போது தான் அதற்கான நேரம் அமைந்திருக்கிறது.
சினிமா என்பது கலை என்றாலும் அது மிகப் பெரிய வணிகம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எனவே, இந்த வியாபாரத்திலும் என்னை நிலை நிறுத்தி கொள்ள வேண்டும் என விரும்பினேன். அதற்காக தான் முதல் படத்திலேயே நல்ல கதையம்சம் கொண்ட கமர்ஷியலான படத்தை எடுக்க வேண்டும் என சொல்லி இயக்குநர்கள் ஜேடி, ஜெர்ரியிடம் சொன்னேன்’ என அந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சரவணன் கூறியுள்ளார்.
ஆதிரா