சமந்தா, சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் “ஆட்டோ இம்யூன்” நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பதிவிட்டிருந்தார்.
அத்துடன் தான் தொடர் சிகிச்சையில் இருந்து வருவதாகவும், விரைவில் குணமடைந்து விடுவேன் என்றும் அந்த பதிவில் சமந்தா குறிப்பிட்டு இருந்தார். இதுதொடர்பாக, ’இதுவும் கடந்து போகும்: சமந்தா நெகிழ்ச்சி பதிவு’ என்கிற தலைப்பில் நம்முடைய மின்னம்பலத்தில் கடந்த அக்டோபர் 29ம் தேதி கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில், ஹரி – ஹரீஷ் இயக்கத்தில் சமந்தா நடித்திருக்கும் ‘யசோதா’ படம் நவம்பர் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அப்படத்தின் புரமோஷன் நிகழ்வுகளில் அவர் கலந்துகொண்டு வருகிறார்.
வாடகைத் தாய்
இந்நிலையில், ’யசோதா’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்வில் பேசிய சமந்தா “இந்தப் படத்தின் கதைக்களம்தான் என்னை இப்படத்தை தேர்வு செய்ய வைத்தது. படத்தின் கருவே வாடகைத் தாய் கிடையாது. கதையில் அதுவும் கூறப்பட்டுள்ளது அவ்வளவுதான். வாடகைத் தாய் பற்றிய என் கருத்து என்னவென்று கேட்டால், நிச்சயம் எனக்கு இதில் எந்தக் கருத்தும் இல்லை.
இறுதியில் எல்லாரும் மகிழ்ச்சிக்கு தகுதியானவர்கள். அவர்களுக்கு எது மகிழ்ச்சியை அளிக்கிறதோ, அதனை செய்யட்டும்.
ஆச்சரியமான த்ரில்லர் படம்
நான் ஆக்ஷன் சீன்களில் நடிப்பேன் என என்றுமே நினைத்ததில்லை. ‘யசோதா’ படத்தில் சிறப்பான சண்டைக் காட்சிகள் உள்ளன. திரையரங்குகளில் அவற்றை பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும். இப்படத்தில் சிறந்த கலைஞர்களுடன் இணைந்து நான் பணிபுரிந்துள்ளேன்.
நான் எப்போதும் ரசிகர்களின் பார்வையிலிருந்துதான் கதை கேட்பேன். அதன் அடிப்படையில் நிச்சயம் ‘யசோதா’ அனைவருக்கும் பிடிக்கும். ஆச்சரியமான த்ரில்லர் படமாக இது இருக்கும்” என்றார்.
நோயை எதிர்த்து போராடுவேன்
மேலும் அவர் உடல்நிலை பற்றி பேசும்போது “சில நாள் உங்களுக்கு நன்றாக இருக்கும். சில நாள் உங்களுக்கு கெட்டதாக அமையலாம். சில நாட்கள் உங்களால் படுக்கையிலிருந்து கூட எழ முடியாத நாளாக இருக்கும். நான் போராடிக் கொண்டிருக்கிறேன்.
ஆனால், ஒன்றை நான் தெளிப்படுத்த விரும்புகிறேன். நான் எந்த நேரத்திலும் இறக்கும் நிலையில் இல்லை. சில பத்திரிகைகள் நான் இறப்பதைப் பற்றி எல்லாம் எழுதுகின்றன. இதில் உண்மை இல்லை. நான் குணமாக சில காலம் தேவைப்படும். நான் நிச்சயம் என் நோயை எதிர்த்து போரிடுவேன்” என்றார்.
சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கும் ஆறுதலாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்: விண்ணில் எப்போது பாயும்?
போக்கஸில் சிக்கிய அஸ்வின்: கலாய்க்கும் ரசிகர்கள்!