ரஜினிகாந்த்தின் 169 ஆவது படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. ஜெயிலர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தை டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் நெல்சன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார் என்பது மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற எந்த தகவலையும் சன் பிக்சர்ஸ் இன்று வரை அறிவிக்கவில்லை.
ஒளிப்பதிவாளர் மாற்றம்
ஆனால், அப்படம் குறித்த பல அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் இணையதளங்களில் வெளியான வண்ணம் உள்ளது. ஜெயிலர் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்ற மனோஜ் பரமஹம்சாவை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அவர் ஏற்கனவே இயக்குநர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருந்தார்.
எனவே, ஜெயிலர் படத்திலும் அவரே இருக்கட்டும் என்று தயாரிப்பு நிறுவனம் உட்பட எல்லோரும் ஒப்புக்கொண்டிருந்தார்களாம்.
இப்போது படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் அதில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஜெயிலர் படத்துக்கு விஜய் கார்த்திக் கண்ணன் புதிய ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.
ஆடை, சிந்துபாத் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் இவர் இயக்குநர் நெல்சனோடு சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர்.
ஏன் இந்த மாற்றம் என விசாரித்தால், மனோஜ் பரமஹம்சாவின் சம்பளம்தான் ஒளிப்பதிவாளரை மாற்றக் காரணம் என்கிறார்கள் கோடம்பாக்கம் வட்டாரத்தில். அவர் ஏற்கெனவே வாங்கிய சம்பளத்தை விடக் குறைவான தொகையைச் சம்பளமாக நிச்சயித்திருக்கிறது சன்பிக்சர்ஸ்.
ஆனால், அவரோ தனக்கான சம்பளத்தைக் குறைக்க ஒப்புக்கொள்ளவில்லையாம். எனவே குறைந்த சம்பளத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்ட விஜய் கார்த்திக் கண்ணனை ஒப்பந்தம் செய்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இராமானுஜம்
பிரதமரின் கோரிக்கையை ஏற்ற ரஜினி