இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்திற்கு தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. திரை பிரபலங்கள் பலரும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்த நடிகர் ரஜினி படக்குழுவினரை பாராட்டி கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடித்தில், “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு, வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள். ‘லாரன்ஸால இப்படியும் நடிக்க முடியுமா? என்ற பிரம்மிப்பை நமக்கு உண்டாக்குகிறது. S.J. சூர்யா இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லதனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தி இருக்கிறார்.
திருவோட கேமிரா விளையாடி இருக்கிறது. கலை இயக்குனரின் உழைப்பு பாராட்டிற்குரியது. தீலிப் சுப்ராயனின் சண்டை காட்சிகள் அபாரம். சந்தோஷ் நாராயணன் வித்தியாசமான படங்களுக்கு வித்தியாசமாக இசை அமைப்பதில் மன்னர். இசையால் இந்த படத்திற்கு உயிரூட்டி தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என்பதை இந்த படத்தில் நிரூபித்து இருக்கிறார்.
இந்த படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக எடுத்திருக்கும் தயாரிப்பாளருக்கு என்னுடைய தனி பாராட்டுகள். படத்தில் வரும் பழங்குடிகள் நடிக்கவில்லை, வாழ்ந்து இருக்கிறார்கள். நடிகர்களுடன் போட்டி போட்டு கொண்டு யானைகளும் நடித்து இருக்கின்றன. செட்டானியாக நடித்து இருக்கும் விது அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அற்புதம்.
இந்த படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மக்களை கைதட்ட வைக்கிறார், பிரமிக்க வைக்கிறார், சிந்திக்க வைக்கிறார், அழவும் வைக்கிறார். I am proud of you கார்த்திக் சுப்புராஜ். My hearty congratulations to கார்த்திக் சுப்புராஜ் and Team” என்று ரஜினி படக்குழுவினரை பாராட்டி எழுதியிருந்தார்.
ரஜினியின் கடிதத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…