இந்திய சினிமாவில் தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ‘பொன்னியின் செல்வன்’. மறைந்த பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார்.
இந்த வரலாற்றுக் காவியம் இன்னும் வெளிவராத நிலையில், தமிழ் சினிமாவின் அடுத்த வரலாற்று சினிமாவாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசனின் வேள் பாரி நாவல் திரை வடிவம் எடுக்கப் போவதாக தகவல்கள் வந்தன. இப்போது இதன் அடுத்த கட்ட தகவல்கள் தெரியவந்துள்ளன.
பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராமன் ,ஐஸ்வர்யா ராய், த்ரிஷா,ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னையில் மிக விமர்சையாக நடைபெற்றது.
ரஜினி, கமல் உள்ளிட்டோர் முதல் பல்வேறு திரைப்பட கலைஞர்கள் அதில் பங்கேற்றனர்.
அதைத் தொடர்ந்து, இணையத்தில் வெளியான டிரைலரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தெலுங்கு திரையுலகில், ராஜ மௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, அதேபோன்று வரலாற்று ரீதியான கதைகளை எடுக்க பலரும் தற்போது முன்வந்துள்ளனர்.
இந்நிலையில்,தமிழில் உள்ள வரலாற்று புனைவு கதைகளையும் திரைப்படமாக்க பலரும் முயன்று வருகின்றனர்.
அந்த வகையில், மக்களவை உறுப்பினரும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி‘ நாவலும் திரைக்குவரப்போவதாக மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதை இயக்குநர் ஷங்கர் இயக்க உள்ளதாகவும் தெரிகிறது.
ஆனந்த விகடன் வார பத்திரிகையில் தொடராக வெளி வந்த போது ’வேள்பாரி’ புத்தகம் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது வேள்பாரி நாவலை திரைப்படமாகவோ அல்லது வெப்-சீரிஸாகவோ ஷங்கர் படமாக்கத் திட்டமிட்டிருக்கிறார்.
கன்னட சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக வெளியான கே.ஜி.எப் திரைப்படத்தில் ராக்கி என்ற பாத்திரத்தில் நடித்த நடிகர் யாஷ், வேள்பாரியில் பாரியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கே.ஜி.எப் இரண்டு பாகங்களையும் தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சு.வெங்கடேசன் எழுதிய ‘காவல் கோட்டம்’ நாவலை அடிப்படையாக வைத்து இயக்குநர் வசந்தபாலன் ‘அரவாண்’ திரைப்படத்தை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்