”தீபாவளிக்கு பிறகு ’காந்தாரா’ பாருங்கள்!” பிரபல இயக்குநர் வேண்டுகோள்

Published On:

| By christopher

‘காந்தாரா’ படத்தை பார்த்த காஷ்மீரி ஃபைல்ஸ் படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி பாராட்டி பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்புகளான கே.ஜி.எஃப்-1, 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து அந்த நிறுவனம் தயாரித்து வெளியிட்ட
படம் ‘காந்தாரா’. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

காந்தாரா வசூல் சாதனை!

கடந்த செப்டம்பர் 30ம் தேதி காந்தாரா படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

அதன் தாக்கத்தின் காரணமாக பிற மொழியைச் சேர்ந்தவர்களும் அப்படத்தைப் பார்க்க தொடங்கியதால் காந்தாரா படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

பழங்குடி மக்களுக்கும், பண்ணையாருக்குமான நிலப் பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் அரசு நிர்வாகம், நிலச்சுவான்தார்கள், பழங்குடி மக்கள் ஆகிய முத்தரப்பினருக்கும் இடையிலான நில அரசியலை துல்லியமாக காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இப்படத்தை நடிகர்கள் கார்த்தி, தனுஷ், ப்ரித்விராஜ் இயக்குநர் ராம்கோபால் வர்மா உள்ளிட்டவர்கள் பாராட்டி இருந்தனர்.

ரூ.16 கோடியில் தயாரிக்கப்பட்ட காந்தாரா இதுவரை ரூ.200 கோடி வசூலை கடந்திருக்கிறது.

மேலும் காந்தாரா படத்தின் தாக்கம் காரணமாக கர்நாடக அரசு 60 வயதுக்கு மேற்பட்ட தெய்வ நர்த்தகர்களுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

pls watch kantara after diwali agnihothri

நாவல் படிப்பது போல இருந்தது!

இந்நிலையில் இப்படத்தை சர்ச்சைக்குரிய காஷ்மீரி ஃபைல்ஸ் படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி பார்த்து விட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர், ”காந்தாரா படம் பார்த்துவிட்டு வெளியே வருகிறேன். நான் இதை சொல்லியே ஆகவேண்டும். நிச்சயம் அது பேரனுபவம். நிச்சயம் இது ஒரு தனித்துவமான அனுபவம்.

நீங்கள் இது போன்ற படத்தை பார்த்திருக்க முடியாது. எனக்கு தெரியவில்லை. நான் இது போன்ற படத்தை பார்த்ததில்லை. ரிஷப் ஷெட்டிக்கு என்னுடைய பாராட்டுகள். நீங்கள் இந்தப்படத்தில் மிகப்பெரிய வேலையை செய்திருக்கிறீர்கள்.

நான் உங்களிடம் நாளை பேசுகிறேன். ஆனால் படம் குறித்தான என்னுடைய அனுபவத்தை என்னால் பகிர முடியாமல் இருக்க முடியவில்லை. ‘காந்தாரா’ திரைப்படம் முழுக்க நம்முடைய நாட்டுப்புறக்கலை நிறைந்தது. இதைப் பார்க்கும் போது நாவல் படிப்பது போல இருந்தது.

குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சி நான் எங்கேயும் பார்த்தது இல்லை. படம் பார்க்காதவர்கள் தீபாவளி முடிந்த பிறகு முதலில் படம் பாருங்கள். காந்தாராவின் மியூசிக், ஆர்ட், சிறந்த ஒளிப்பதிவு என அனைத்தும் சிறப்பு. காந்தாரா படம் ஒரு “மாஸ்டர் பீஸ்” என விவேக் அக்னிஹோத்ரி கூறியுள்ளார்.

இராமானுஜம்

கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத அரசன்… யார் இந்த விராட் கோலி?

கோவை: காரில் இருந்து வெடித்து சிதறியது வெடிபொருட்களா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel