ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தழுவி எடுக்கப்பட்ட ’பேட்டைக்காளி’ இணையத்தொடரின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.
இயக்குநர் வெற்றிமாறன் வழிகாட்டுதலில் தயாரிக்கப்பட்டுள்ள ’பேட்டைக்காளி’ இணைய தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (அக்டோபர் 11) சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தழுவி எடுக்கப்பட்ட முதல் இணையத்தொடர் ’பேட்டைக்காளி’. காளைகளை அடக்குபவர்களுக்கும் வளர்ப்பவர்களுக்கும் இடையே உள்ள பெருமை, வீரம், விளையாட்டுத் திறன் ஆகியன ‘பேட்டைக்காளி’யில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஜல்லிக்கட்டு விளையாட்டின் உணர்வுப்பூர்வமான தருணம் என்றால், அது காளை வளர்ப்பவர்களின் அன்பு மற்றும் அதை விளையாட்டில் அடக்குபவர்களின் ஆக்கிரமிப்பு இவற்றைச் சொல்லலாம்.
இதை ‘பேட்டைக்காளி’யில் விரிவாகவே காட்சிப்படுத்தியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ’மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தின் நாயகன் அந்தோணி இந்த இணையத்தொடரில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

ஆஹாவின் CEO அஜித் தாக்கூர் இந்த நிகழ்வில் பேசுகையில், “நல்ல தரமான, பலதரப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்வையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
தமிழ் பார்வையாளர்களுக்கு ஏற்றபடியான தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகளை வழங்குவதில் ஆஹாவை பொறுத்தவரை ‘பேட்டைக்காளி’ இணையத் தொடரை மிகப் பெரிய முன்னெடுப்பாக கருதுகிறோம்.
இதற்குமுன்பு நாங்கள் வெளியிட்ட ‘அம்முச்சி கிராமம்’ என்ற தொடர், நம் நினைவுகளில் இருந்த நம் பாட்டி ஊருக்கு மீண்டும் அழைத்துச் செல்வது போன்ற உணர்வை கொடுத்தது.
’பேட்டைக்காளி’ நம் இரத்தமும் வியர்வையும் கலந்த தமிழின் பெருமையைக் கூறுவதாகும். சுவாரஸ்யமான முன்மாதிரியை கொண்ட இந்தக் கதை பற்றி விரைவில் தமிழ் பார்வையாளர்கள் தெரிந்துகொள்வார்கள்” என்று அவர் பேசினார்.
இணைய தொடரின் இயக்குநரான La.ராஜ்குமார் ‘பேட்டைக்காளி’ உருவாக்கம் குறித்து, “முன்பெல்லாம் மனிதர்கள் காடுகளில் அலைந்து திரிந்தனர். அதன்பிறகு காளைகள், அவர்கள் வாழ்வில் வந்த பிறகுதான் விவசாயத்தையும் காளைகள் வளர்ப்பது குறித்தும் கற்றுக் கொண்டனர்.

எனவே, காளைகள் வந்த பிறகுதான் மனிதர்களின் வாழ்வில் கலாச்சாரம் மெல்ல வளரத் தொடங்கியது. ஆதிகாலத்தில் மனிதர்கள் காளைகளை அடக்கியது இப்போதும் நம் கலாச்சார விளையாட்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது நம் நாட்டிலேயே நம் மாநிலத்தில்தான் நடக்கிறது.
நம்முடைய கலாச்சாரத்தில் காளைகளின் முக்கியத்துவம் குறித்து பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஜல்லிக்கட்டு உலகில் இதுவரை சொல்லப்படாத கதைகளை ஆராயவும் இந்த இணையத் தொடரை உருவாக்கியுள்ளோம்” என்றார்.
இராமானுஜம்
மணிரத்னத்துடன் இணையும் படம் : குழப்பத்தில் ரஜினி?
சின்னத்திரை நடிகை திவ்யா புகார் – அர்ணவ் ஆஜராக சம்மன்!