காப்பிரைட் விதிகளை மீறியதாக நடிகை நயன்தாராவிடத்தில் தனுஷ் கேட்ட ரூ.10 கோடி தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நயன்தாராவுக்கு ஆதரவாக நெட்பிளிக்ஸ் நிறுவனமும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தது.
அந்த மனுவில், நயன்தாராவின் ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சிகள் தொடர்பான தனுஷின் தயாரிப்பு நிறுவனமான ஒண்டர்பார் பிலிம்ஸ் தாக்கல் செய்த பதிப்புரிமை மீறல் வழக்கை தள்ளுபடி செய்ய கோரப்பட்டிருந்தது .
மேலும், ‘நெட்ஃபிளிக்ஸ் அலுவலகம் மும்பையில் இருப்பதால் சென்னை நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு இல்லை. நெட்ஃபிளிக்ஸ் மட்டுமல்ல, அனைத்து பிரதிவாதிகளிடமும் வழக்கு தொடர தனுஷ் அனுமதி பெற்றிருக்க வேண்டும். படப்பிடிப்புத் தளத்தில் இருந்து ஒரு புகைப்படம் 2020 ஆம் ஆண்டு இணையத்தில் பதிவேற்றப்பட்டது, அதன் மீது தனுஷ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆவணப்படம் வெளியான ஒரு வாரத்திற்குப் பிறகுதான் இந்த வழக்குத் தொடரப்பட்டது, எனவே வணிக நீதிமன்றச் சட்டத்தின் பிரிவு 12A முறையாக பின்பற்றப்படவில்லை. அதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நெட்பிளிக்ஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
அதே வேளையில், தனுஷ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் சில வாதங்களை நீதிமன்றத்தில் முன் வைத்தார். அவர் வாதிட்டதாவது,’ படப்பிடிப்பு காட்சிகள் உட்பட, திரைப்படத் தயாரிப்பின் போது உருவாக்கப்பட்ட அனைத்து உள்ளடக்கத்திற்கும் தயாரிப்பாளருக்கு பதிப்புரிமை உண்டு. படத்தில் தோன்றும் நயன்தாராவின் உடை மற்றும் சிகை அலங்காரம் கூட தயாரிப்பாளரின் பதிப்புரிமைக்கு உட்பட்டது. இதனை ஒப்புக்கொண்டு நயன்தாரா அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
ஆவணப்படம் வெளியான பிறகுதான் பயன்படுத்தப்பட்ட காட்சிகள் குறித்து தெரியவந்ததால், ஆவணப்படம் வெளியாகும் வரை வழக்குத் தொடரப்படவில்லை. காட்சிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு நயன்தாரா தரப்புக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அதையும் மீறி காட்சிகளை பயன்படுத்தியுள்ளனர். எனவே, இந்த படத்துடன் தொடர்புடையை எந்த விஷயங்களை அனுமதி பெறாமல் பயன்படுத்தினாலும் அது காப்பி ரைட் விதிமுறைகளை மீறியது என்று எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என்கிற வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி நெட்பிளிக்ஸ் மனுவை தள்ளுபடி செய்தார். அதே வேளையில், தனுஷ் 10 கோடி கேட்டு தாக்கல் செய்த உரிமையியல் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.