இயக்குனரும் நடிகருமான மனோபாலா மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். உடல் நல குறைவு காரணமாக இன்று(மே 3) மறைந்தார் மனோபாலா.
ஒல்லியான உடல்வாகு மூலம் கனகச்சிதமான நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் இந்த தலைமுறைக்கு அறிமுகமானவர் மனோபாலா.
ஆனால் தனது ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் மிக வீரியமான இயக்குனராக தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார் மனோபாலா.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குனராக இருந்த மனோபாலா, தனது முதல் படத்தை 1982ஆம் ஆண்டு இயக்கி வெளியிட்டார். கார்த்திக்-சுகாசினி நடித்த ஆகாய கங்கை என்ற படம்தான் மனோபாலா இயக்கிய அந்த முதல்படம்.

அதன்பின் மோகன் நடித்த நான் உங்கள் ரசிகன், மோகன் ராதிகா நடித்த பிள்ளை நிலா, பாரு பாரு பட்டணம் பாரு, விஜயகாந்த் நடித்த சிறைப்பறவை, ’ கார்த்திக் நடித்த தூரத்துப் பச்சை, ரஜினி நடித்த ஊர்க் காவலன், விஜயகாந்த் நடித்த என் புருசன்தான் எனக்கு மட்டும்தான்,
மூடு மந்திரம், தென்றல் சுடும், சத்யராஜ் நடித்த மல்லுவேட்டி மைனர், ராம்கி நடித்த வெற்றிப் படிகள், விஜயகாந்த் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், செல்வா நடித்த செண்பகத் தோட்டம்,
அருண்பாண்டியன் நடித்த முற்றுகை, கருப்பு வெள்ளை, பிரகாஷ் ராஜ் நடித்த நந்தினி, ஜெயராம் நடித்த நைனா என்று ஏராளமான படங்களை இயக்கினார் மனோபாலா.

குறு சிறு பட்ஜெட்டில் சினிமா தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு உகந்த இயக்குனராக திகழ்ந்து அவர்களின் பிசினஸும் கையைக் கடிக்காதவாறு பல்வேறு படங்களை இயக்கியவர் மனோபாலா.
தனது இயக்குனர் அனுபவத்தையும் கதையை கிரகித்துக் கொள்ளும் திறனையும் வைத்து இரண்டாவது இன்னிங்சில் நகைச்சுவை நடிகராகவும், குணச் சித்திர நடிகராகவும் ஜொலித்தார் மனோபாலா.
அதனால் இயக்குனர் மனோபாலா என்ற பிம்பத்தை விட நடிகர் மனோபாலா என்ற பிம்பமே இந்தத் தலைமுறைக்குத் தெரிந்திருக்கிறது.
-வேந்தன்