கடந்த அன்னையர் தினத்தை (மே 12) முன்னிட்டு நாம் திரைப்படங்களில், தொலைக்காட்சியில், பொதுவாழ்க்கையில் கண்ட சில அன்னையருக்கு நமது மின்னம்பலம் சார்பாக ‘Super Mom awards – 2024′ என்கிற விருதை வழங்க வேண்டும் என்கிற முன்னெடுப்பை எடுத்தோம்.
அதில் நாம் விருது தந்த ஒருவர் தான் நடிகை சாந்தி வில்லியம்ஸ். இந்த நிகழ்வில் அவர் வாழ்க்கையில் கடந்து வந்த பல அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார். அதில், அவரது வாழ்க்கையில் முக்கிய பங்காக இருந்த சில திரைப் பிரபலங்களின் புகைப்படங்களை காட்டி அவர்கள் குறித்த சாந்தியின் அனுபவத்தை பகிரும்படி கேட்டுக்கொண்டோம்.
சாந்தி வில்லியம்ஸ் முதலில் எடுத்த புகைப்படம் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலின் புகைப்படம்.
சாந்தி வில்லியம்ஸ்: இவருக்கு நிறையா சமைச்சிக் கொடுத்துருக்கேன். ஆனா இவருக்கு நன்றி இல்ல( அதே சிரித்த முகத்துடன்) தயவு செஞ்சி என்ன தப்பா நினைக்காதீங்க. இவரோட இரண்டாவது படமான ‘ஹலோ மெட்ராஸ் கேர்ல்’ எங்களோட படம்.
எங்க வீட்டுக்கு வந்ததும் நேரா கிச்சனுக்கு போவார். எங்க அம்மாட்ட போயி “மீன்கறி உண்டோ?” என்று கேட்பார். “ஆன் உண்டல்லோ” என்று எங்க அம்மா சொல்லுவாங்க, “செம்மீனு?(இறால் இருக்கா?) அப்படினு கேட்பாரு. இருக்குனு எங்க அம்மா சொல்ல சமச்சு சாப்ட்டு, இவரே கேரியர் எடுத்துட்டு வந்து அதுல சாப்பாடு எடுத்துட்டு போவாரு.
வில்லியம்ஸ் இவர வச்சு 4 படம் பண்ணினாரு. எப்பவும் “லால், லால்” என்று தான் சொல்லுவாரு. நிறை மாச கர்ப்பிணியா, நான் என் நகைய அடமானம் வச்சு இவருக்கு நடக்கமுடியாம போயி அறுபதாயிரம் கொடுத்தேன். ஆனா, இவ்வளவு செஞ்சும் என் புருஷன் செத்தப்போ மோகன்லால் வரல. இவருக்கு என்னைக்குமே எங்கிட்ட மரியாதையே கிடையாது, தப்பா நினைக்காதீங்க. இவர உலகத்துக்கே பிடிக்கும், ஆனால் எனக்கு இவர பிடிக்காது.
அடுத்தபடியாக சமீபத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் புகைப்படத்தை எடுத்த சாந்தி வில்லியம்ஸ், அந்த புகைப்படத்தைக் கண்ணில் ஒற்றிக்கொண்டார்(மிகுந்த நெகிழ்ச்சியுடன்).
சாந்தி வில்லியம்ஸ்: கடவுள் மாதிரி. இவர் நல்லா இருந்து, ஒரு முதலமைச்சரா ஆகிருந்தாருனா மக்களுக்கு நல்லது பண்ணிருப்பாரு. மக்களுக்கு கொடுத்துவைக்கல.
அன்னப்பிரபு. அவரு சாவு ஊர்வலம் போறப்போ, இரண்டு கழுகு மேல சுத்துச்சு. அத பாத்துட்டு, அவர் பசங்ககிட்ட நான் சொன்னேன், “ஹீ இஸ் காட்” (அவர் கடவுள்). எத்தன வருஷமானாலும் இவர யாராலும் மறக்கவே முடியாது.
நரசிம்மா படத்துல நான் நடிச்சதுக்கு, அப்போ படுத்த படுக்கையா இருந்த வில்லியம்ஸ்க்கு உதவனும்ன்னு பேசுனதவிட அதிகமா பணம் கொடுத்தாரு. இன்னைக்கும் கோடிக்கணக்கான பேரு இவரு சாப்பாட சாப்டுட்டு இருக்காங்க. அந்த குடும்பம் இவரு பெருமைய காப்பாத்தனும்.
இவரு கால் தூசு கூட இங்க யாரும் பெறமாட்டாங்க (மோகன்லாலின் புகைப்படத்தைச் சுட்டிக்காட்டி). இப்படிப்பட்ட மனுஷன், சாப்பாடு போட்டு சாப்பிட்ட அவரு (மோகன்லால்) இவரு (விஜயகாந்த்) சாவுக்கு வரல. ஒரு போன் பண்ணிக்கூட கேக்கல.
அடுத்ததாக அவர் எடுத்தது, பழம்பெரும் நடிகை எஸ்.என்.லஷ்மியின் புகைப்படம்.
சாந்தி வில்லியம்ஸ்: எஸ்.என்.லஷ்மி அம்மா எனக்கு அம்மா மாதிரி. எதாவது ஒன்னுனா, படபடனு “ சாந்தி என்னம்மா? எங்கமா இருக்கனு” பேசிட்டு வந்துருவாங்க. “காசு வேணுமா? செலவுக்கு காசு வச்சிருக்கியா? ஒரு 5,000 கொடுத்து விடவா?” அப்படின்னு உடனே எனக்குக் கேட்டு செஞ்ச அம்மா. ஜோடி படம் முடிகிற தருணத்துல, ரொம்ப கஷ்டம், என் பசங்களும் நானும் பால்ல விஷம் கலந்து குடிச்சிடலாம்னு இருக்கோம், அவங்க கால் பண்ணி என்ன வர சொல்லி, காசு கொடுத்தாங்க.
அடுத்ததாக இருந்த நடிகை ஷோபாவின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு கண்கலங்கினார் சாந்தி வில்லியம்ஸ்.
சாந்தி வில்லியம்ஸ்: இவ என் உயிர். ‘அக்கல்தாமா (மலையாள படம்)’ நடிக்கிறப்போ, ஷோபா என் தங்கையா நடிச்சா. நாங்க இரண்டு பேரும் ஷூட்டிங் ஸ்பாட்ல ஓடிப் பிடிச்சு விளையாடுவோம். என் மடியில ஏறி உட்காந்துப்பா, சாக்லேட் வாங்கிகொடுப்பேன் சாப்டுவா. அப்படி இருந்த புள்ளைய ‘மூடுபனி’ல நான் நடிக்கிறப்போ, அவ சூசைட் பண்ணிக்கிட்ட அந்த சாரில தான் நான் கடைசியா அவள பாத்தேன். இவங்க குடும்பத்துல நானும் ஒரு பொண்ணு மாதிரி.
ஒருத்தர் இன்னொருத்தருக்கு வாழ்க்க கொடுக்கனும். ஆனா பாலுமகேந்திரா இவ வாழ்க்கைய அழிச்சிட்டாரு. அவரு (பாலு மகேந்திரா) எனக்கு முதல் கேமராமேன். ஆனால் அவர பாத்தாலே எனக்கு பிடிக்காது. இந்த பொண்ணு வாழ்க்கையில அவர் போய் இப்போம் உசுரவிட்ருச்சு.
முழு பேட்டியைக் காண:
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
4 கோடி விவகாரம்… சிபிசிஐடிக்கு ‘அழுத்தம்’ கொடுக்கும் பாஜக
இது தவறான வழிகாட்டுதல் : தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் பதில்!