அ. குமரேசன் Mithya Kannada Movie Review 2025
(கன்னடத் திரைப்படம்) Mithya Kannada Movie Review 2025
சிறப்புத் திரையிடலுக்கான அழைப்பில் இருந்த, ஒரு சிறுவன் சைக்கிளில் செல்கிற படமும், இணையத்தில் தேடியபோது கிடைத்த “பெற்றோரை இழந்தவனின் பயணம்” என்ற ஒற்றை வரி அறிமுகமும், வீட்டை விட்டுப் போகிறவன் பல்வேறு மனிதர்களைப் பார்க்கிறான், உலகத்தைப் பற்றிய ஞானம் பெற்றவனாகத் திரும்புகிறான் என்றொரு கதையை ஊகிக்க வைத்தன.
வெளியே போகிற குழந்தையை மையமாகக் கொண்ட, ஏற்கெனவே பார்த்திருக்கிற பல படங்கள் ஏற்படுத்திய ஊகம் அது. ஆனால், திரையில் கதை விரிய விரிய, அந்த ‘மித்யா’ கலைகிறது.
வெளியிடங்களுக்கான பயணமாக இல்லாமல், 11 வயதுச் சிறுவன் மிதுன் உடனிருக்கும் மனிதர்களையும் உள்ளங்களையும் சந்திக்கிற “உள்” பயணமாக முற்றிலும் மாறுபட்ட திரையனுபவம் வாய்க்கிறது. Mithya Kannada Movie Review 2025

குடும்பம் மும்பையில் வாழ்ந்துகொண்டிருந்தபோது ஏற்கெனவே தகப்பன் இறந்துவிட, தாயும் தற்கொலை செய்துகொள்ள, தாயின் தங்கையும் அவளது கணவனும் மிதுனை கர்நாடகத்தின் உடுப்பி வட்டாரத்தில் தங்களுடைய வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள். மிதுனின் பெற்றோரால் தத்தெடுக்கப்பட்டவளான வந்தனா இவர்களது மகள்தான், அவளும் தனது பெற்றோரிடமே திரும்புகிறாள். Mithya Kannada Movie Review 2025
வீடு, ஊர் என எல்லாமே புதிதாக இருக்கிற சூழலில் அவற்றோடு பொருந்திப் போவதில் பெரும் சவாலை எதிர்கொள்கிறான் மிதுன். உள்ளூர்ப் பள்ளியில் சேர்த்துவிடப்படுகிறான், அங்கேயும் மற்ற பசங்களோடு ஒட்டுவதற்கு மொழி உள்பட பல தடைகள்.
பெற்றோரின் இறப்பு பற்றிய கடந்த கால நினைவு, அவர்கள் ஏன் இறந்தார்கள் என்ற புதிராக மாறுகிறது. அப்பாவைக் கொன்றதே அம்மாதான், நாட்கள் கடந்த பின் தன்னையும் மாய்த்துக்கொண்டாள் என்று உறவினர்கள் பேசிக்கொள்வதை மிதுன் மறைந்திருந்து கேட்கிறான்.
அவர்கள் சொல்வது உண்மைதானா என்று தெரிந்துகொள்ள முடியாமல் தவித்து மேலும் தனிமைப்படுகிறான். நமக்கும் கூட, கடைசி வரையில் அது மர்மமாகவே போய்விடுகிறது. ஆனால், தாயைத் தகப்பன் எதற்கெடுத்தாலும் அடித்திருக்கிறான் என்ற பின்னணி கொஞ்சம் தெரியவருகிறது. ஏன் இதையெல்லாம் தெளிவுபடுத்தவில்லை என்று கேட்கத் தேவையில்லாத அளவுக்குப் படம் வேறு உலகத்திற்குள் நம்மைக் கொண்டுபோய்விடுகிறது.
குழந்தைகளின் கண் முன்பாகப் பெற்றோர் உயிரிழப்பதும், விபத்தில் பெற்றோரைக் குழந்தைகள் பறிகொடுப்பதும் அடிக்கடி நம் கண்களில் படுகிற செய்திகள்தான். அந்த நொடியில் அந்தக் குழந்தைகளின் மீது நமக்குப் பரிவும் ஏற்படும்.
அதைத் தாண்டி, அவர்கள் என்ன ஆகிறார்கள், எப்படி வளர்கிறார்கள், எப்படிப்பட்ட நிலைமைகளைச் சந்திக்கிறார்கள் என்று (நமக்குத் தெரிந்த குடும்பங்களாக இருந்தாலன்றி) யோசித்திருப்போமா? நாம் நேரடியாக எதுவும் செய்ய முடியாமல் போகலாம், ஆயினும் ஒரு பொது அணுகுமுறை உருவாவதில் பங்களிக்க முடியுமே? படமும் நேரடியாக இதைப் பேசவில்லை என்றாலும் இப்படி யோசிக்க வைக்கிறது.
வகுப்பில் கூடப் படிக்கிறவனுடன் நட்பு உருவாகிறது. அவன் இவனுக்கு ஊரின் பல இடங்களைக் காட்டுகிறான் – குதித்துக் கும்மாளம் போடுவதற்கான குளம் உள்பட. பல்வேறு பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொடுக்கிறான் – மொழி உள்பட, கெட்டவார்த்தைகளையும் கூட. விளையாட்டுகளோடு நிகழ்காலம் கடக்கிறது. ஆயினும் கடந்தகாலம் அழுத்துகிறது.
இதற்கிடையே, தகப்பன் வழி சொந்தக்காரர்கள் வருகிறார்கள். தாய் மீது பழி சுமத்துகிறார்கள், மிதுனைத் தங்களுடன் அனுப்பக் கட்டாயப்படுத்துகிறார்கள். இவனையும் தனியாகச் சந்தித்து வந்துவிடுமாறு கூறுகிறார்கள். மிதுன் மேல் பாசம் வைத்ததாலா, சொத்தின் மீது கண் வைத்ததாலா என்ற, விடை தேவைப்படாத மற்றொரு வினா வந்துபோகிறது. Mithya Kannada Movie Review 2025
அந்த வந்தனா திரும்பத் திரும்ப “அண்ணா அண்ணா” என்று இவனிடம் வருகிறாள். இவன் திரும்பத் திரும்ப அவளை விரட்டியடிக்கிறான். “உன் தங்கைதானே.” என்று சித்தியும் சித்தப்பனும் கேட்க, ”இல்லை, இவள் உங்கள் மகள்,” என்கிறான். அவள் மீது என்ன கோபம்? தன் மீது பெற்றோர் பொழிந்த அன்பிற்குப் போட்டியாக வந்தவள் என்றா, அவளுடைய வருகைதான் அம்மாவின் துயரத்திற்குக் காரணம் என்று நினைப்பதாலா? இவனுடைய வெறுப்பு எந்த அளவுக்குப் போகிறது என்றால்… Mithya Kannada Movie Review 2025
நீச்சல் கற்றுக்கொடுப்பதாகக் கூறி அந்தக் குளத்திற்குக் கூட்டிச் சென்றவனின் செயலில், அடுத்த சில நொடிகளில் நிகழும் மாற்றத்தில் நம் மனம் உறைந்தும் போகிறது, உருகவும் செய்கிறது.

மித்யா என்ற தலைப்பு மிதுனையும் குறிக்கிறது, கன்னடத்தில் மாயை, தவறான கருத்து, கட்டுக்கதை உள்ளிட்ட பொருள்களையும் தருகிறது. உலகத்தையும் உறவுகளையும் பற்றிய மிதுனின் தவறான கருத்தைக் கலைத்து, குழந்தைகளைப் புரிந்துகொள்வதில் பெரியவர்களின் மாயையைக் கலைக்கவும் படம் முயல்கிறது. சினிமா என்றால் இப்படித் தொடங்கி இப்படித் தொடர்ந்து இப்படி முடியும் என்ற பழகிப்போன தடமும் மித்யாவாகிறது.
இந்திய சினிமாவின் உலகளாவிய அங்கீகாரம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்துகிற, பாராட்டுகளையும் விருதுகளையும் திரட்டிக்கொண்டிருக்கிற ஒரு படத்திற்கான அரங்க–வணிகவெளி மறுக்கப்படுவது, இத்தகைய முயற்சிகளை முடக்கும் சிறுமை, அத்துடன் மக்கள் இப்படிப்பட்ட கலையாக்கங்களைக் காண விடாமல் தடுக்கும் கொடுமை.

சொல்லிக்கொடுத்ததை அப்படியே செய்ததாகத் தெரியவில்லை மிதுனாக வரும் அதிஷ் ஷெட்டி நடித்திருப்பதைப் பார்க்கிறபோது. வந்தனாவாக அந்தச் சிறுமியின் பார்வையும் துறுதுறுப்பும் கண்ணீரும் சிரிப்பும் அப்படியே அணைத்தெடுத்துக்கொள்ளத் தூண்டுகின்றன.
பிரகாஷ் துமிநாட், ரூபா வர்கடே உள்ளிட்டோர் நடிப்பும், இயல்பான காட்சியுணர்வை ஏற்படுத்தும் உதித் குரானா ஒளிப்பதிவும், ஆழ்ந்ததோர் உணர்வில் ஆழ்த்தும் புவனேஷ் மணிவண்ணன் இசையமைப்பும் என எல்லாமாகச் சேர்ந்து மித்யாவைப் பற்றி நிறையப் பேச வைக்கின்றன.
சில உண்மைச் செய்திகள், உரையாடல்களிலிருந்து கதையை உருவாக்கியதாகக் கூறும் சுமந்த் பட், தனது அருமையான இந்த முதல் படைப்பின் மூலம் அடுத்தடுத்து நிறைய எதிர்பார்க்க வைத்திருக்கிறார். Mithya Kannada Movie Review 2025