பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகை மீரா மிதுன் தலைமறைவாகி உள்ளதாக நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.
பட்டியலின மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் திரைத் துறையில் பெற்றுள்ள முன்னேற்றம் குறித்த தனது கருத்தை வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்டார் நடிகை மீரா மிதுன்.
அவர் மீதும், இதற்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிவு செய்தது.
கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
பின்னர், நடந்த விவகாரம் குறித்து பகிரங்க மன்னிப்பு கோரிய மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி முன்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி சாட்சிகள் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் இரண்டாவது குற்றவாளியான ஷாம் அபிஷேக் மட்டுமே நேரில் ஆஜரான நிலையில் மீரா மீதுன் ஆஜராகவில்லை.
எனவே அவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி விடுமுறை என்பதால், இந்த வழக்கு மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பு இன்று(ஆகஸ்ட் 29) விசாரணைக்கு வந்தது.
இன்றும், ஷாம் அபிஷேக் மட்டுமே ஆஜரானார். அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர், மீரா மீதுன் எங்கு உள்ளார் என்பதை தேடி வருவதாகவும், தற்போது அவர் தலைமறைவாக உள்ளதாகவும், விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு நீதிபதி ஸ்ரீதேவி தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.
கலை.ரா
சித்ரா ராமகிருஷ்ணனுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு!