இந்திய சுதந்திரப் போராட்ட காலத்திலும், இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தடைசெய்யப்பட்ட காலத்திலும் தங்களது சகாக்களை அடையாளம் காணவும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவும் இடதுசாரிகளால் பயன்படுத்தப்பட்ட “லால் சலாம்” (செவ்வணக்கம்) என்கிற கோஷத்தைத் தலைப்பாகக் கொண்ட திரைப்படத்தில் ரஜினிகாந்த் கெளரவ தோற்றத்தில் நடிக்க அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டில் ‘3’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 2015-ம் ஆண்டில் கௌதம் கார்த்திக் நடிப்பில் ‘வை ராஜா வை’ என்கிற படத்தையும் இயக்கினார். இரண்டு படங்களும் வணிகரீதியாக வெற்றிபெறாத படங்கள்.
இந்நிலையில், ஐஸ்வர்யா இயக்கத்தில் படம் தயாரிக்கத் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டாததால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தால் கடந்த ஏழு வருடங்களாகப் படம் எதுவும் இயக்க முடியவில்லை.
இந்நிலையில் தற்போது மீண்டும் மூன்றாவது முறையாகப் படத்தை இயக்கும் வாய்ப்பை லைகா நிறுவனம் அவருக்கு வழங்கியுள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.
‘லால் சலாம்’ எனப் பெயரிட்டுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் கலை இயக்குநராக ராமு தங்கராஜ் மற்றும் படத் தொகுப்பாளராக பி.பிரவீண் பாஸ்கர் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்ற உள்ளனர்.
இந்தப் படத்தின் தொடக்க நிகழ்வு நேற்று (5.11.2022) காலை சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த தொடக்க நிகழ்ச்சியில் லைகா நிறுவனத்தின் தலைவரான சுபாஷ்கரன் அல்லிராஜா, நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் லைகா நிர்வாகத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.
‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று லைகா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான ஜி.கே. தமிழ் குமரன் தெரிவித்தார்.
லால் சலாம் படத்தின் தலைப்பு நேற்று காலை அறிவிக்கப்பட்ட பின் அதற்கான பொருள் விளக்கம் தேடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
அம்பலவாணன்
வம்சி இதயத்தை கொள்ளையடித்த திருமூர்த்தி
குஜராத் தேர்தல்: பாஜகவுக்கு காத்திருக்கும் 10 சவால்கள்!