என்னுடைய அடுத்த படத்தில் மாரிமுத்துவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தேன் என்று இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து இன்று (செப்டம்பர் 8) காலை நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். அவரது மரணம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த மாரிமுத்து உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாரி செல்வராஜ், “மாரிமுத்து மிகவும் இயல்பான மனிதர். அவருடைய மரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது. பரியேறும் பெருமாள் படத்தில் ஜோவின் அப்பாவாக நடித்திருந்தார். ஒரு இயக்குநருடைய அழுத்தத்தையும் அரசியலையும் புரிந்துகொண்டு படத்தில் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தார். படம் எங்களுக்குள் ஒரு நெருக்கத்தை உண்டாக்கியது.
சினிமாவை, அரசியலை, மனிதர்களை விரும்பக்கூடிய மனிதரை நாம் இழந்திருக்கிறோம். அவரது வைரலான வீடியோ நிறைய எனக்கு அனுப்புவார். சில வீடியோக்களில் இப்படி பேசியிருக்கக்கூடாது என்று கூறியிருக்கிறேன். வயதில் சிறியவனாக இருந்தாலும் நான் சொல்வதை கேட்டிருக்கிறார். கர்ணன், மாமன்னன் படங்களில் நடிக்க அழைக்காததற்கு சண்டை போட்டிருக்கிறார். அடுத்த படத்தில் அவரை நடிக்க வைப்பதற்காக திட்டமிட்டிருந்தேன். அவரது இழப்பில் குடும்பத்தோடு துணை நிற்கிறேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்