மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் மனோபாலா உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகரும், திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான மனோபாலா கடந்த இரண்டு வருடங்களாக கல்லீரல் பிரச்சனை காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (மே 3) அவரது இல்லத்தில் உயிரிழந்தார்.
இது சக நடிகர்கள், ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியது. இவரது மறைவிற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இயக்குநர்கள் பாக்யராஜ், ஷங்கர், லோகேஷ் கனகராஜ், சமுத்திரக்கனி, நடிகர்கள் மன்சூர் அலிகான், விஜய், ஆரியா, சரத்குமார், சூரி, கோவை சரளா, ராதிகா எனப் பலர் நேரடியாகச் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மேலும் ரசிகர்கள் பலரும் ’சினிமா துறைக்குப் பெரிய இழப்பு’ என்று சமூக வலைத்தளங்களில் இரங்கல் செய்தியைப் பதிவிட்டு வந்தனர்.
தொடர்ந்து இன்று (மே 4) காலை 11.30 மணியளவில் சாலிகிராமத்தில் உள்ள மனோபாலா இல்லத்தில் இருந்து இறுதிச்சடங்குகள் நிறைவு பெற்று இறுதி ஊர்வலம் நடைபெற்றது. மனோபாலாவின் இறுதி ஊர்வலத்திலும் திரையுலகினர், ரசிகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மனோபாலாவின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்திற்கு மதியம் 12.40 மணியளவில் கொண்டுவரப்பட்டு, இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் மதியம் 1 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.
மோனிஷா
ஆளுநர் மாளிகை செலவினங்களில் விதிமீறலா?: பிடிஆருக்கு ஆர்.என்.ரவி பதில்!